திரை

சிற்றிதழ் அறிமுகம் 20
 திரை
Published on

" எனது சிறு பிராயத்து ஞாபகங்களுள் எர்மியும், ஜன்னல் வழியாக படுக்கையறைக்குள் வரும் நிலாவின் வெளிச்சமும் என்னால் மறக்க முடியாதது.எனக்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கும் போதுதான் எர்மி என்னைக் கவனித்துக் கொள்ளும் பணிப்பெண்ணாக வந்து சேர்ந்தாள்.அவளுக்கு அப்போது பதினெட்டு வயதிருக்கும்.சற்றுச் சாய்வான கண்களும் பட்டுப் போன்ற கேசமும் கொண்டிருந்த டேனிஷ் பெண் அவள். இந்தோனேஷிய ரத்தம் அவளது சருமத்தை அடர்ந்த பழுப்பு நிÈத்திற்கு மாற்றியிருந்தது. நேரடியாகப் பார்க்காமலே, குரலைக் கேட்காமலேயே அவள் என் அறைக்குள் வந்திருப்பதை அவளிடமிருந்து வரும் சுவாசத்தின் வினோதமான நறுமணத்தை வைத்தே உணர்ந்து கொள்வேன்"

(- மார்லன்பிராண்டோவின் தன்சரிதம்,திரை ' ஜன2006')

நவீன சினிமா, வெகுசன சினிமா இரண்டு
தளத்தையும் உள்ளடக்கிய சினிமா மாத இதழாக 'திரை' வெளி வந்து கெண்டிருக்கிறது. ஆசிரியர் - மணிமேகலை. ஒருங்கிணைப்பாளர், முருக சிவகுமார்.

" கலாச்சாரம், அடையாளங்கள், உறவுகள், பண்பாடு, மொழி, என்று எந்த பற்றுமற்று சினிமா போன்ற ஒரு வலிமையான ஊடகம் வெறும் நுகர்வு சாதனமாக வீரியம் பெறுவதை விசாரணைக்கு உள்ளாக்காமால் எப்படி விடுவது. மனிதத்தின் சரி பாதி ஆளுமையான பெண் சமூகத்தை வெறும் போகத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வதும், பார்வையாளர்களை அறியாமையில் வைத்திருக்கச்செய்யும் உள்ளடக்கத்தைத் தொடர்ந்து தருவதும், வன்முறை மற்றும் பாலியல் வக்கிரங்களை கேளிக்கைக்கான சூத்திரமாக்கியதும் அதிகாரமையங்களின் அசுத்தங்களை தக்க வைத்துக் கொண்டதும் சினிமாவின் சாதனைகள் அல்ல.சினிமாவைக் கையாள்பவரின் திட்டமிட்ட தவறுகள்" என இன்றைய தமிழ் சினிமா சூழலை விமர்சிக்கிறது முதல் இதழ் தலையங்கம்.

உலகத் திரைப்படங்கள் குறித்தும், கேரளம் உள்ளிட்ட பிற மாநிலப் படங்கள் குறித்தும், சர்வதேச திரைப்பட விழாக்கள் குறித்தும் இவ்விதழில் கட்டுரைகள் இடம் பெற்று வருகின்றன. ஒவ்வொரு இதழிலும் வெகுசன சினிமாவைச் சார்ந்த முக்கிய ஆளுமையும், நேர்காணலும் இடம் பெற்று வருகிÈது. நடிகர் சூர்யா, இயக்குநர் சேரன், இயக்குநர் மகேந்திரன், சாபு சிரில் போன்றோரின் நேர்காணல்கள் இடம் பெற்று வருகின்றன.

பிரபஞ்சன், அ. ராமசாமி, டிராட்ஸ்கி மருது, ஜெயமோகன், அருண்மொழி, டி.ஜி.ஆர்,வசந்தகுமார், செழியன், யுகபாரதி, சுகுமாரன், அறந்தை மணியன், சாருநிவேதிதா, அசோகமித்திரன், அ.மார்க்ஸ் என பலதரப்பட்டவர்களின் படைப்புகள் வெளியாகி வருகின்றன.

நவீன சினிமா என்றால் புரியாத மொழி நடையில் எழுதவேண்டும் என்கிற எண்ணத்தை உடைத்து எல்லோருக்கும் புரியும் படியான எளிய மொழி நடையில் இவ்விதழ் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன.

" உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ்சினிமா குறித்து ஒரு மாற்று சினிமாவுக்கான இதழாக 'திரை' தொடர்ந்து வெளிவரும்" என்கிறார் ஆசிரியர் லீனா மணிமேகலை. தமிழ்க் குடும்பங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக வெகுசன சினிமா ஆகிவிட்டது.எனவே வெகுசன சினிமாவை நிராகரிக்க முடியுமா என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.

" திரை, பத்திரிகை மட்டுமல்ல.ஒரு மாபெரும் இயக்கத்தின் துவக்கம்.சினிமாவை நேசிக்கும் படைப்பாளிகள், பார்வையாளர்கள், விமர்சகர்கள், சிந்தனையாளர்கள் என்று அத்தனை பேரையும் ஒரு தளத்தில் இணைக்கும் முயற்சி" என்று கூறும் ஆசிரியர் 'திரை' யை ஒரு சினிமா இயக்கமாகவும் முன்னெடுத்துச் செல்லவிருப்பதாகக் கூறுகிறார்.

திரை வாசகர்களை இணைத்து மாவட்டந்தோறும் திரை இயக்கத்தை ஆரம்பித்து ஈரான் போன்ற உலக நாடுகளின் சினிமாக்களை வெகுசன மக்களிடம் கொண்டு செல்லவும் திட்டமிட்டிருக்கிறார்.

ஆசிரியர் பற்றி:

கவிஞர், குறும்பட இயக்குநர், நடிகர், பதிப்பாளர், என பன்முக ஆளுமையைக் கொண்டவர் லீனா மணிமேகலை. 2003 ல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு ' ஒற்றை இலையென' வெளியானது. மாத்தம்மா, பறை, தீர்ந்து போயிருந்தது காதல், break the shackles, connecting lines பலிபீடம், அலைகளைக் கடந்து ஆகிய குறும் படங்களை இயக்கியிருக்கிறார். கனவுப் பட்டறை என்ற பதிப்பகத்தையும் நடத்தி வருகிறார். நவீன இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா ஆகியன தொடர்பாக இதுவரை இருபது புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்.

பிப்ரவரி 03, 2006

 திரை
கதைச்சொல்லி
logo
Andhimazhai
www.andhimazhai.com