உங்கள் நூலகம்

சிற்றிதழ் அறிமுகம் 12
உங்கள் நூலகம்
Published on

"நல்ல புத்தகத்தை காண்பதும் அதைச் சொந்தமாகப் பெறுவதும் வாழ்க்கையைச் செழிப்பாக்கும். புத்தகம் நிரந்தரத் துணைவனாகிறது. சில காலங்களில் புத்தகங்கள் நமக்கு முன்னால் பிறந்தவையாக இருக்கும். அவை நம் வாழ்க்கைப் பயணத்திற்கு வழி காட்டுபவை. தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும்.

1953ஆம் ஆண்டு சென்னை மூர் அங்காடியில் பழைய புத்தகக் கடையொன்றில் 'பல விளக்குகளிலிருந்து வரும் ஒளி' என்னும் புத்தகம் வாங்கினேன். வாட்சன், வில்லியன் எய்ச்சர் ஆகியோர் இதனைச் செப்பிட்டு வெளியிட்ட ஆசிரியப் பெருமக்கள். என் நெருங்கிய நண்பனாகவும் 50 ஆண்டுகளுக்கு மேலாகவும் வழிகாட்டும் துணைவனாகவும் இருந்தது அப்புத்தகமே. அதைப் பலமுறை படித்து, அடிக்கடி பயன்படுத்துவேன். பக்கங்கள் கிழிந்து பிய்ந்து போனதால் பலமுறை கட்டமைக்க நேரிட்டது. படிப்போருக்குப் பிரச்சனை தோன்றும் போதெல்லாம் அனுபவம் மிக்க சிறந்த சிந்தனை மாந்தரின் சிந்தனை அதில் உள்ளதனால் அதனைப் படிப்போர்க்கு கண்களில் நீர் சொரியும். மகிழ்ச்சி எல்லை மீறும்போது தென்றலை வீசி மனத்தைக் குளிர்வித்துச் சரியான கருத்தை உருவாக்கும். இப்புத்தகத்தின் முக்கியத்துவத்தை நான் மிக நன்றாக உணர்ந்தவன்."

- புத்தகங்களின் முக்கியத்துவம் குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் 27.8.2005 அன்று 11ஆவது டெல்லி புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில் ஆற்றிய உரையின் சிறுபகுதி இது. அவரது உரையின் தமிழாக்கம் முழுவதும் 'உங்கள் நூலகம்' (செப்-அக்.2005) இதழில் வெளியாகி உள்ளது. இப்படி புத்தகங்கள், நூலகங்கள் குறித்த ஆக்கங்களைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது 'உங்கள் நூலகம்'.

தமிழ் இலக்கியச் சூழலில் கலை இலக்கியம் சார்ந்து பல இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்றாலும், நூல் விமர்சனத்திற்கென்று 'புத்தகம் பேசுது' போன்ற ஒரு சில இதழ்களே வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று 'உங்கள் நூலகம்', இரு மாத இதழ்.

1985ஆம் ஆண்டு இவ்விதழ் தொடங்கப்பட்டது. அப்போது இதழில் ஆசிரியர் ஆர். இராதாகிருஷ்ணமூர்த்தி. ஆசிரியர் குழு: தொ.மு.சி. ரகுநாதன், ஆர். பார்த்தசாரதி. 16 பக்கங்களில் வெளிவந்த இவ்விதழின் அப்போதைய விலை ரூ1. ஆண்டு சந்தா 5 ரூபாய். 1990இல் 'நேரு நூற்றாண்டு மலர்', 'பாரதிதாசன் நூற்றாண்டு மலர்' ஆகிய சிறப்பு வெளியீடுகளை வெளியிட்டிருக்கிறது. 1990 வரை வெளிவந்து இதழ் நின்றுவிட்டது.

பிறகு மீண்டும் 2005 ஜனவரியிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. நியூ செஞ்சுரி புக் ஹவுசின் முழு பொறுப்பில் வெளிவந்து கொண்டிருக்கும் உங்க நூலகத்தின் இப்போதைய ஆசிரியர், ஆர். பார்த்தசாரதி. நிர்வாக ஆசிரியர் ஆர். சாரதா.

உங்கள் நூலகம் புத்தக விமர்சன இதழாக இருந்தாலும் தற்போது முக்கிய கட்டுரைகளும், நேர்காணல்களும், தொடர்களும் இடம்பெற்று ஒரு இலக்கிய இதழாகவே வந்து கொண்டிருக்கிறது.

ரா. கிருஷ்ணையாவின் 'மொழி பெயர்ப்பாளர் சிந்தனைக்கு', பொ. வேல்சாமியின் 'நூலக வரிசை', கிருஷ்ண கோவிந்தனின் 'நூலகம் ஓர் அறிமுகம்', பா. ஆனந்தகுமாரின் 'பரண்', சுகுமாரின் 'பக்கத்துவீடு' ஆகிய தொடர்கள் குறிப்பிட தகுந்தவையகும்.

ஆர். பார்த்தசாரதியின் 'மார்க்சியம்: இலக்கியம் கலை' எனும் கட்டுரையும், 'மூலதனம்' புத்தகம் குறித்த பெ. மணியரசனின் கட்டுரையும் முக்கியமானவையாகும்.

சுப. வீரபாண்டியன், விடுதலை இராசேந்திரன், கு.வெ.கி. ஆசான், சி. அண்ணாமலை என அனைத்துத் தரப்பினரின் எழுத்துகளும் இவ்விதழில் இடம்பெற்று வருகின்றன.

வெ. இறையன்பு, அ. வெண்ணிலா, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சே. ராமானுஜம், ஆஷாபாரதி, மெளன குரு போன்றோரது நேர்காணல்களும் இவ்விதழில் இடம்பெற்று வருகின்றன.

தமிழுக்குத் தொண்டாற்றிய கதிரைவேற்பிள்ளை, தாமோதரன் பிள்ளை, உ.வே.சா. போன்றோர் பற்றிய சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. நியூ செஞ்சுரி வாசகர் சங்கம் சார்பில் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது. திருச்சியில் 21.8.05 அன்று 'அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்' எனும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை நடத்தியது. என்.சி.பி.எச். நிறுவனம் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட அம்பேத்¸¡ருடைய 34 தொகுதிகளை முன்வைத்து இக் கருத்தரங்கு நடைபெற்றது.

தஞ்சாவூரில் அக்டோபர் 2005இல் 22,23 ஆகிய இருநாட்களில் நியூ செஞ்சுரி வாசக சங்கமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகமும் இணைந்து '21 ஆம் நூற்றாண்டு தொடக்க கால தமிழ் நாவல்கள்' எனும் தலைப்பில் ஒரு கருத்தரங்கை நடத்தியது.

காரல் மார்க்சின் மூலதனம், சங்க இலக்கியங்கள் முழு தொகுதி, ராகுல்ஜி தத்துவ வரிசை நூல்கள் என்.சி.பி.எச்சின் முக்கிய வெளியீடுகளாகும்.

ஜீவாவின் முழுப் படைப்புகளையும், மா. சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சியத்தையும் வெளியிட உள்ளது. டாக்டர் அப்துல்கலாமின் இந்தியா2020 நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்நூலை மாணவர்களுக்கான எளிய பதிப்பாக வெளியிட்டு ஒரு இலட்சம் பிரதிகள் வரை விற்Àனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரைப் பற்றி....

தற்போது 80 வயதாகும் ஆர். பார்த்தசாரதி, ரிசர்வ் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிடாலும் இதழ்ப் பணியிலும், எழுத்துப் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 'ரிசர்வ் வங்கி தொழிற்சங்கம்' தொடங்கியவர்களில் இவரும் ஒருவர். தொழிற்சங்கப் பணியோடு தமிழ்ப் பணியும் ஆற்றி வருகிறார்.

இவரது 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வெற்றிப் பயணம்' எனும் நூல் 1982இல் வெளிவந்தது.

'மார்க்சீயத்தின் எதிர்காலம்' எனும் நூல் 1995இல் வெளியானது. ரஷ்ய எழுத்தாளர் அலெக்சாண்டர் கோந்தர் தோவின் 'இந்துமாக் கடல் மர்மங்கள்' எனும் நூலையும் அமீர் ஹைதர்கானின் 'தென்னிந்தியாவைக் கண்டேன்' எனும் நூலையும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார்.

'சமூக விஞ்ஞானம்' என்னும் இதழின் ஆசிரியர் குழுவிலும் செயல்பட்டு வருகிறார்.

இனி அவருடன் சில விநாடிகள்.

உங்கள் நூலகம் இதழின் நோக்கம் எதிர்காலத் திட்டம் குறித்து சொல்லுங்களேன்.?

"தமிழில் இடதுசாரி இலக்கியத்தை மக்களிடம் கொண்டு செல்லுதல், படிப்பறிவை பட்டி தொட்டியெல்லாம் பரவலாக்குதல், நடமாடும் புத்தக நிலையத்தின் வாயிலாக கிராமங்களுக்கும் புத்தகங்களைக் கொண்டு செல்லுதல் ஆகியவை உங்கள் நூலகத்தின் நோக்கமாகும்.

கட்சி சார்பின்றி அனைத்து படைப்பாளிகளும் இவ்விதழில் எழுதி வருகின்றனர். வீணான சர்ச்சைகளையும் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துகளையும் தவிர்த்து வருகிறோம். அனைத்து பதிப்பகத்தின் புத்தகங்களையும் காய்தல் உவர்த்தலின்றி நேர்மையான விமர்சனங்களை வெளியிட்டு வருகிறது "உங்கள் நூலகம்" என்கிறார் ஆசிரியர் பார்த்தசாரதி.

பிப்ரவரி 03, 2006


உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
logo
Andhimazhai
www.andhimazhai.com