எம்புருசனுக்கு அவ ஏன் லைக் போடறா ?

எம்புருசனுக்கு அவ ஏன் லைக் போடறா ?

Published on

தொழில்நுட்பம் வளர்ந்துடுச்சா... டக்குன்னு ஆணும் பொண்ணும் பழகுறதும் ஈசியாயிடுச்சு. ஆனால் இந்த தொழில்நுட்பத்தால் பிரச்னைகளும் பெரிசாயிடுச்சு. சமூக ஊடகங்களில் இல்லாத மனிதர்களே இந்த காலத்தில் இல்லை. புருசனும் இருக்கான். பொண்டாட்டியும் இருக்கா. இதனால் பலப்பல பிரச்னைகள் வந்தாலும் முக்கியமான சில பிரச்னைகள் கீழே இருப்பவை:

1) ஃபாலோ பண்றதில்லை - சமூக ஊடகத்தில் நானும் அவளும் பல மாதமாக லவ் பண்றோம். அவ புரிஞ்சிக்கிறமாதிரி நிறைய ட்வீட் போடறேன். முகநூலில் எழுதுறேன். ஒண்ணுத்துக்கு அவ லைக் போடறதில்லை. கமெண்ட் எழுதறதில்லை. ரீட்வீட்டோ மென்ஷனோ கிடையாது. இப்படிப்புலம்புபவர்கள் இருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் புருசனுக்காக/ காதலனுக்காக வரிந்துகட்டிக்கொண்டு வரும் பெண்களையும் அதே போல் ஆண்களையும் பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் இப்படிச் செய்யாவிட்டால் பிரச்னைதான். ஆனால் பாஸ்... உங்கள் தோழரோ தோழியோ, சமூக ஊடகத்தை வெறும் தொழில்ரீதியான மேம்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்துபவராக இருந்தால் இப்படி  சண்டை போட்டு அல்லது உள்ளத்தில் வெந்து யாது பயன்?

2) எப்பப் பாத்தாலும் போனை/ லேப்டாப்பை நோண்டறான்/ள்

இது இப்ப இருக்கிற புது சண்டைக்கான முகாந்திரம். தம்பதிகள் சாப்பிடறதுக்காக உணவு விடுதிக்கு வந்திருப்பாங்க. அங்க பாத்தீங்கன்னா, ரெண்டு பேரும் பேசிக்காம அவங்க அவங்க போனை, லேப்டாப்பை கைல புடிச்சி எதாவது பண்ணிட்டி இருப்பாங்க. இல்லன்னா பொண்டாட்டி பேசுவா.. புருசன் தலையை ஆட்டுவான். கண்ணெல்லாம் கையில் இருக்கும்  பொருள் மேலயே இருக்கும். இப்டி இருந்தால் ஏன் பிரச்னை வராது?

3) ஆதிகாலத்து நவீன உணர்ச்சி- சந்தேகம்

ஏன் அவ/அவன் உன்னுடைய முகநூல் ஸ்டேட்டசுக்கு தொடர்ந்து லைக் போடறா? கமெண்ட் எழுதறா? அவகூட உனக்கு என்ன தொடுப்பு? கேட்டுருவாய்ங்க. முகநூலிலோ, ட்விட்டர்லயோ சும்மா பேச்சுக்கு வழிஞ்சாலும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டு உர்ர்ர்.தான்! எப்டி அவனை இவளுக்குத்தெரியும்? என்று நினைத்து சண்டை பிடிக்கலாம். ஆகவே கபர்தார்!

4) பொய் சொல்லாதே மாமு!

இந்த காலத்தில் சமூக ஊடகம் மாட்டிவிட்ரும். இன்னிக்கு சினிமாவுக்குப் போகலாமா என்று மனைவியோ காதலியோ கூப்பிடுவாய்ங்க. இல்லம்மா ஆபீஸில் வேலைன்னு சொல்லிடுவோம். பாஸ் வந்து.. வா மேன்.. ஹோட்டலுக்குப் போகலாம்னு கூப்பிடுவார். ஒரு ரவுண்ட் சரக்குப் போட்டுட்டு ஒரு போட்டோ செல்போனில் எடுத்து முகநூலில் போட்டு ஹாயா சிரிப்போம். செத்தாண்டா சேகரு.. அவளும் முகநூலில் இருக்காள்ல.. இருக்காள்ல.. அப்புறம் உனக்கு சங்குதாண்டி... அதனால் கூடுமானவரை உண்மை சொல்லவும்.

5) முன்னாள் காதலன்/ காதலி.

இந்த காலத்தில் இது சகஜமான விஷயம். ஆனால் ஒரு புது உறவுக்குள் வந்த பின்னர் பழைய வாழ்க்கையை மறக்க முடியாது. அப்பப்ப போய் நம்ம பழைய ஆளு எப்படி இருக்கான்? எப்படி இருக்கான்னு எட்டி முக நூலில்/ வேறு சமூக ஊடகத்தில் பார்ப்பது சகஜம்தான். இதனால் பிரச்னை வருவது சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது. ஆகவே இந்த முன்னாள் உறவுகளிடம் எச்சரிக்கையாக இருக்கணும்.

6) யார்கிட்ட முதலில் சொல்வது?

ஒரு நல்ல சேதி வந்துட்டதுன்னா.. அதாவது உங்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வுனு வெச்சிக்கிடுங்க.. உடனே உற்சாகத்தில் துள்ளிக் குதித்து நீங்க இந்த காலத்தில் என்ன பண்றீங்க? உடனே ட்விட்டர்ல அடிச்சர்றீங்க.. அதை உங்களை பாலோ பண்ற மனைவியும் பாக்கறாங்க. அவங்க என்ன நினைப்பாங்க. மவனே என்கிட்டகூட சொல்லாம உன்னை பாலோ பண்ற நூத்துச்சொச்சம் பிக்காளிக கிட்ட சொல்றீயா?னு கோச்சிப்பாங்க. வூட்டுக்குப் போன உடனே உங்களத் தூக்கிப்போட்டு மெரிப்பாங்க.. இந்த பிரச்னை தம்பதிகளிடம் அதிகமாயிட்டு வர்தாம்..

ஜூலை, 2015.

logo
Andhimazhai
www.andhimazhai.com