லவ்யூ சாரு!

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா
Published on

மற்ற எழுத்தாளர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், யாரும் பேசத் துணியாத விஷயங்களை நான் பேசுகிறேன். 

உதாரணமாக, என் நண்பரின் நாவலை ஒரு வாசகர் தன் தாயாரோடு சேர்ந்து வாசித்த அனுபவத்தை நண்பருக்கு எழுதியிருந்ததை அவரது இணைய தளத்தில் வாசித்தபோது நமக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை கிடையாது என்று நினைத்தேன்.  காரணம், மகாபாரதத்தை அம்மாவோடு சேர்ந்து படிக்கலாம்.  காமரூப கதைகளை அப்படிப் படிக்க முடியாதே?  சில ஆண்டுகளுக்கு முன்னால் புத்தக விழாவில் ஒரு பிரபல இயக்குனரைச் சந்திக்க நேர்ந்தது.  என் புத்தகங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்ட அவர் ஒரு விஷயம் சொன்னார்.  ‘‘வீட்டில் வயதுக்கு வந்த மகள் இருக்கிறாள்; அதனால் உங்கள் புத்தகங்களை மறைத்து வைத்துத்தான் படிக்க வேண்டியிருக்கிறது.'' தமிழ் சினிமாவில் இல்லாத ஆபாசத்தையா நான் எழுதி விட்டேன் என்று நினைத்துக் கொண்டாலும் அவரிடம் கேட்கவில்லை. 

இருந்தாலும் எனக்கான வாசகர்கள் எங்கேனும் ஒரு மூலையில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதைச் சில சந்தர்ப்பங்களில் அறிந்துகொள்ள முடிந்தது.  சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிலிருந்து ஒரு வாசகி தொடர்பு கொண்டார்.  அப்போதுதான் ஸீரோ டிகிரி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியாகி ஆங்கிலப் பத்திரிகைகளில் அதற்கு நல்ல முறையில் மதிப்புரைகள் வந்து கொண்டிருந்த நேரம்.  அந்த வாசகி அந்த நூலின் நூறு பிரதிகளை வாங்கினார்.  அமெரிக்க நகரங்களில் உள்ள பொது நூலகங்களுக்கு அந்த நூலை வழங்குவதாக எழுதினார்.  அவர்கள் எந்த நூலையும் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை.  ஆதலால் அவர்களின் மதிப்பீட்டுக் குழுவில் ஸீரோ டிகிரியின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்துவிட்டு ஏற்றுக் கொண்டார்கள்.  ஒவ்வொரு நூலகத்துக்கும் எழுதி இதைச் சாதித்தார் அந்த வாசகி.  அமெரிக்காவிலிருந்து எனக்கு வரும் பெரும்பாலான கடிதங்கள் அங்கே வசிக்கும் தமிழர்களிடமிருந்து அல்ல, அந்த நாட்டைச் சேர்ந்தவர்களிடமிருந்தே வருகின்றன.  ஒரு எழுத்தாளரை உலகம் அறியச் செய்வது என்றால் இப்படித்தான் செய்ய வேண்டும். 

ஒருநாள் நானும் நண்பர்களும் டிமிட்ரியின் திருமணத்துக்கு மதுரையிலிருந்து காரில் சென்று கொண்டிருந்தோம்.  அப்போது என்னோடு வந்து கொண்டிருந்த மனாசே, ‘‘இங்கே திருபுவனம் என்ற ஊரில் சிங்கப்பூர் சலூன் என்ற கடை வைத்திருக்கும் கஜேந்திரன் உங்களுடைய எல்லாப் புத்தகங்களையும் படித்திருக்கிறார்; கடைக்கு வருபவர்களுக்கும் உங்கள் புத்தகங்களைக் கொடுத்துப் படிக்கச் சொல்வார்'' என்றார்.  உடனே அவர் கடைக்கு வண்டியை விடச்சொன்னேன்.   வாடிக்கையாளர் ஒருவருக்கு முகச்சவரம் செய்து கொண்டிருந்த கஜேந்திரன் கடை வாசலில் என்னைப் பார்த்ததும் கத்தியை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து விட்டார்.  என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் அது.  அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். 

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.  முதலில் திறந்த வெளி அரங்கில் பேசினேன்.  3000 பேர் குழுமியிருந்தனர்.  அந்த அமர்வு முடிந்த கையோடு ஒரு உள் அரங்கில் 200 பேர் மத்தியில் பேச வேண்டியிருந்தது.  பொதுவாக அந்த இலக்கிய விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்த சர்வதேச எழுத்தாளர்கள் ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக இருந்தனர்.  உள் அரங்கில் என் பேச்சை அப்படியே துவங்கினேன்.  என் சக எழுத்தாளர்களின் கல்வித் தகுதியைப் பார்த்து அச்சம் ஏற்படுகிறது; நான் கல்லூரிப் படிப்பையே முடிக்காதவன் என்று என் பேச்சை ஆரம்பித்தேன்.  அப்போது அங்கே அமர்ந்திருந்த ஒரு இளம் பெண் ‘‘கூடச்t'ண் தீடதூ தீஞு டூணிதிஞு தூணித, இடச்ணூத…'' என்று பெரும் குரலில் சொன்னார்.  ஒரு கணம் எனக்குப் பேச்சே ஓடவில்லை.  அவர் முகத்தைப் பார்த்தேன்.  தமிழ் அல்ல.   என் எழுத்தை ஆங்கிலத்தில் படித்த யாரோ ஒரு வாசகி. கூட்டம் முடிந்ததும் அந்த முகத்தைத் தேடினேன்.  ம்ஹும்.  கிடைக்கவில்லை.  வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் அது. 

2001 - ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒரு சம்பவம் இது.  நானும் பாரிஸைச் சேர்ந்த நண்பர் ஒருவரும் கடும் பசியுடன் அலைந்து கொண்டிருந்தோம்.  இருவரிடமும் ஒன்றிரண்டு ஃப்ராங்க்குகளே இருந்தன.  அது கழிப்பறை செல்வதற்குத் தேவைப்படும்.  அங்கே நம்மூர் மாதிரி நின்ற இடத்தில் ‘சூசூ' போக முடியாது.  போனால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும். 

மெத்ரோ பாஸ் இருந்ததால் எங்கே வேண்டுமானாலும் போய்க் கொள்ளலாம்.  மற்றபடி காஃபிக்குக் கூட ஃப்ராங்க் இல்லை.  நண்பரின் வீட்டுக்குப் போனால் பன்றிக்கறி கிடைக்கும்.  ஆனால் சாப்பிட்டு வயிற்றை ரொப்புவதற்காகவா இத்தனை தூரம் வந்திருக்கிறோம்?  ஆனாலும் நடக்கக் கூட முடியாதபடி பசி.  அப்போது அங்கே தெரிந்த ஒரு உணவகத்தில்  காஃபியாவது குடிப்போம் என்று நுழைந்தோம்.  எங்களைப் பார்த்துவிட்டு கல்லாவிலிருந்தவர் ஓடி வந்தார்.  தமிழர்.  என்னை அவருக்குத் தெரிந்திருந்தது.  அது மட்டும் அல்ல; என் எழுத்தை ஒன்று விடாமல் படித்திருந்தார்.  காஃபி சொன்னேன். மதிய நேரம்.  சாப்பிடச் சொன்னார் அந்த நண்பர்.  எங்கள் இருவரின் நிலையையும் சொன்னேன்.  ‘‘எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் வாழ வைக்கும் பாரிஸுக்கே இது அவமானம்.  நீங்கள் இந்த நகரில் இருக்கும் வரை நீங்கள் இங்கே பணம் கொடுக்காமல் சாப்பிட்டுக் கொள்ளலாம்; நான் இந்த உணவகத்தின் முதலாளி'' என்று சொன்னார்.

மற்றொரு ஆச்சரியமான சம்பவம்.  லண்டனிலிருந்து எனக்கு மார்க் ரேப்போல்ட் என்பவர்  ''எங்களுடைய அணூtகீஞுதிடிஞுதீ அண்டிச் இதழுக்கு உங்களால் தொடர் கட்டுரை எழுத முடியுமா?'' என்று கேட்டு  ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  ஓவியத்துக்கான அந்த இதழின் ஆசிரியர் அவர்தான்.  எனக்கு ஓவியம் பற்றி ஒன்றும் தெரியாதே என்று பதில் எழுதினேன்.  ஓவியம் வேண்டாம்; பொதுவாக எழுதுங்கள் என்றார்.  ''என்னை எப்படித் தெரியும்?'' ஸீரோ டிகிரியைப் படித்திருந்தார். உலகம் முழுவதிலிருந்து பல்வேறு மொழிகளில் ஆயிரக் கணக்கான நாவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.  அந்த சமுத்திரத்தில் ஸீரோ டிகிரியை எப்படிப் பிடித்தார்?  யார் சிபாரிசு செய்திருக்க முடியும்?  அப்போதிருந்து மார்க் ரேப்போல்ட் என் எழுத்தைத் தேடித் தேடிப் படிக்கும் வாசகராக மாறி விட்டார். 

இந்த இடத்தில் வேறொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்.  என் எழுத்தைப் பலர் வெறித்தனமான வாசகர்களாகி விடுவதை கவனித்திருக்கிறேன்.   அதை ஒரு ஞிதடூt ஞூணிடூடூணிதீடிணஞ் என்று கூட சொல்லலாம்.  அதேபோல் என் எழுத்தைப் படித்து என்னைக் கொல்ல வேண்டும் என்ற அளவுக்கு என்னை வெறுக்கும் வாசகர்களும் உண்டு.  ஆனால் ஆச்சரியம் என்னவென்றால், அவர்களால் என் எழுத்தை விட்டு ஒதுங்கி வாழவே முடியவில்லை.  தினந்தோறும் படித்துத் துன்புற வேண்டும்.  அது அவர்களின் விதி.

ஜனவரி, 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com