நெய்வேலி என்.எல்.சி. விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விவசாயிகளையும் தொழிலாளர்களையும் தி.மு.க. அரசு வஞ்சிப்பதாகவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்றும் கூறி, மாநில அரசுக்கு எதிராகவும், என்.எல்.சி. நிறுவனத்தைக் கண்டித்தும் தே.மு.தி.க. சார்பில் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமைவகித்தார்.
நெய்வேலியில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களை பணி வரன்முறை செய்யவேண்டும் என்பது உட்பட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 16ஆவது நாளாக அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. நெய்வேலி மையப் பேருந்து நிலையம் அருகில் உள்ள மைதானத்தில் அவர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள். அவர்களை நேற்று மதியம் சந்தித்த பிரேமலதா, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.