சாதிமோதல்- பழைய ஆணைய அறிக்கைகள் எல்லாம் என்ன ஆச்சு?- சிபிஎம் கொக்கி

சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன்
சிபிஐஎம் கே.பாலகிருஷ்ணன்
Published on

சாதி மோதல்களைத் தடுக்க அமைக்கப்பட்ட பழைய ஆணைய அறிக்கைகள் எல்லாம் என்ன ஆயிற்று என மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் நேற்றும் இன்றும் அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் இதுகுறித்து தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தீர்மானத்தில், “ சாதிரீதியான பாகுபாடுகளும், ஒடுக்குமுறையும் தமிழ்நாட்டில் புரையோடியிருக்கிறது. இது பள்ளி மாணவர்கள் மத்தியில் பரவி வருவது மிகுந்த கவலைக்குரிய விசயமாகும். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக வன்முறைகளை தவிர்ப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துதற்கும் வழிமுறைகளை உருவாக்குவதற்கு நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவினை அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.” என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும்,”கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மூலம் கடும் தண்டனை பெற்றுத் தர அரசு முயற்சி எடுக்க வேண்டும். தாக்குதலுக்கான சின்னதுரை மற்றும் அவரது தங்கைக்கு உயர் தர சிகிச்சையளிக்க அரசு முன்வர வேண்டும். அத்துடன் அக்குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்குவதுடன், இரண்டு குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் அரசே ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும்,

”தென் மாவட்டங்களில் நடைபெற்ற சாதிக் கலவரங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையங்கள் கொடுத்த பல்வேறு பரிந்துரைகள் இதுவரை அமலாக்கப்படவில்லை. அவற்றை அமல்படுத்த ஆக்கப்பூர்வமான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், பள்ளிகளில் இதுபோன்று நிலவும் சாதிய பாகுபாடுகள், தீண்டாமைக் கொடுமைகள், அதன் வடிவங்களை அறவே ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, தேவையான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்த வேண்டும்.” என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு வலியுறுத்தியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com