நாங்குநேரி- நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்க உத்தரவு

நீதிபதி சந்துரு
நீதிபதி சந்துரு
Published on

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவுமான வழிமுறைகள் வகுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள இன்று செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்னர், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன், அவனுடைய குடும்பத்தினர் சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது என்றும் இச்சம்பவம் தன்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அதில் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால சமூகம் சாதி, மதம், போன்ற பிற்போக்குச் சிந்தனைகள் இல்லாமல், சகோதர உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும்; புதிய தமிழ்நாட்டைப் படைக்கவேண்டும்; இதை எண்ணித்தான் கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புப் பெருக்கம் போன்ற மக்கள்நலன் சார்ந்த திட்டங்களில் திமுக அரசு முனைப்பு காட்டிவருகிறது. இந்த நிலையில் இந்த சம்பவம் மூலம் சாதி, இனப் பிரச்னைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களில் சில பகுதியினர் தேவையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற கசப்பான உண்மை நமக்கு தெரியவருகிறது என்றும்

இளைய சமூகத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்னை என்பதால், இதில் அரசு எந்த நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்க உத்தரவிட்டுள்ளேன் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குழு, கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைப் பெற்று, அதன்படி அரசுக்கு விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com