ஆளுநர் ரவி - முதல்வர் ஸ்டாலின்
ஆளுநர் ரவி - முதல்வர் ஸ்டாலின்

‘அமைச்சரை நீக்கவோ, சேர்க்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை’ – முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Published on

"இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் எனவும் அமைச்சரை நீக்கவோ, சேர்க்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” என ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், பின்னர் உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் ஆளுநர் எழுதிய கடிதங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். இதில் மூத்த அமைச்சர்களும் வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.

இதில், நீதிமன்ற காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க எந்த வகையிலாவது ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்தும், கடிதத்தில் ஆளுநர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஆளுநருக்கு பதில் கடிதம் எழுதவும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், ”தமிழ்நாடு அரசு அமைச்சரவை பற்றியோ உங்களிடம் எந்த ஒரு ஆலோசனையும் கேட்கவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக நீங்களே அறிக்கையை வெளியிட்டு விட்டு, அதை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளீர்கள். அதுவும் அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு சொல்வதாக கூறியிருக்கிறீர்கள். இதிலிருந்து நீங்கள் அந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் யாரையும் ஆலோசிக்கவில்லை என்பது தெரிய வருகிறது. அமைச்சரை நீக்க சொல்வது, சேர்க்க சொல்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. விரும்பதகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக கூறியது சரியல்ல.

எப்போதும் தமிழ் கலாச்சாரத்தின் படி மரியாதையாகத்தான் தங்களை நடத்தி வந்துள்ளோம். அதற்காக தங்களின் சட்டவிரோத உத்தரவுக்கு பணிய வேண்டும் என அர்த்தம் இல்லை. அதோடு நீங்கள் ஒரு சார்பு தன்மையுடன் செயல்பட்டுள்ளீர்கள். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. உங்களின் ஒரு சார்பு தன்மை தான் உங்களின் நோக்கம். சிபிஐ குட்கா வழக்கை விசாரிக்க வேண்டும் என கூறிய போதும் நடவடிக்கை இல்லை. இதன் மூலம் தங்கள் இரட்டை நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகிறது. அதேபோல செந்தில் பாலாஜியை விசாரணைக்காக மட்டுமே அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதுவரை குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை. எனவே செந்தில் பாலாஜி விசாரணையில் தலையிடுவார் என்பது அடிப்படையற்றது. அமைச்சர் பொறுப்பில் புதிதாக ஒருவரை சேர்ப்பதோ அல்லது நீக்கம் செய்வதோ முதல்வரின் முடிவுகளுக்கு உட்பட்டது. பதவிப்பிரமாணம் செய்துவைக்க மட்டுமே ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரின் தலைமையின் கீழ் செயல்படும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமில்லை என்றும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com