பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பயணம் 234ஆவது தொகுதியாக திருப்பூரில் முடித்தபின் பல்லடம் தொகுதியில் நிறைவுபெறுகிறது. இதையொட்டி பெரும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி அதில் பங்கேற்கிறார் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இதைத் தெரிவித்தார்.
இதுவரை 183 தொகுதிகள் முடிவடைந்துவிட்டதாகவும் வரும் 11ஆம் தேதியன்று சென்னைக்குள் வரவுள்ளதாகவும் 200ஆவது தொகுதிப் பயணம் சென்னையில் நடத்தவிருப்பதாகவும் அதில் பா.ஜ.க. தலைவர் நட்டா கலந்துகொள்ளவிருப்பதாகவும் அவர் கூறினார்.
ஏப்ரல் இரண்டாவது, மூன்றாவது வாரத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
மேலும், மாநில அளவில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்கான குழுவையும் அவர் அறிவித்தார். சக்ரவர்த்தி தலைமையிலான அக்குழுவில், நரேந்திரன், நாராயணன் திருப்பதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக, சென்னை, அமைந்தகரையில் பா.ஜ.க.வின் மாநிலத் தேர்தல் பணி மையத்தை அண்ணாமலை திறந்துவைத்தார். அப்போது மேலிட தேர்தல் பொறுப்பாளர்களான அரவிந்த் ரெட்டி, சுதாகர் மேனன், புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் உடனிருந்தனர்.