நந்தனாரை அவமதிப்பதா?- ஆளுநருக்கு சி.பி.எம். கண்டனம்!

நந்தனாரை அவமதிப்பதா?- ஆளுநருக்கு சி.பி.எம். கண்டனம்!

Published on

நந்தனார் பிறந்த நாளில் பட்டியலின மக்களுக்கு அவமதிப்பு செய்ததாக தமிழ்நாடு ஆளுநருக்கு சி.பி.ஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

கடலூர் மாவட்டத்தில், நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமம் உள்ளது. அங்கு ஆர்.எஸ்.எஸ். சார்பு சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நந்தனார் பிறந்த நாள் நிகழ்வில்  பட்டியல் சாதி மக்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு ஆளுநர்  முன்பு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வு நடத்தப்பட்டதும் அதில் ஆளுநர் பங்கேற்றதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.

நிலவுடைமையாளரிடம் வேலை செய்த நந்தனாருக்கு பிறப்பின் அடிப்படையில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதும், சிதம்பரம் நடராசர் சன்னதியில் நுழைய விரும்பிய அவரை நெருப்பில் ஐக்கியமாக்கியதுமே வரலாறாக உள்ளது. அவரை தீயிட்டுக் கொளுத்திய கொடிய சாதிய வன்மம் கொண்ட கூட்டத்தின் கருத்தையே, இப்போது பட்டியல் சாதியினருக்கு அவரது பிறந்த நாளில், அவரது மண்ணில் பூணூல் அணிவிப்பதன் மூலம் மீண்டும் ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார். பிறப்பின் அடிப்படையில் உயர்வு கற்பித்தலை நியாயப்படுத்துவது நந்தனாரை அவமதிக்கும் செயலாகும். 

இந்த நிகழ்ச்சியை முன்னெடுத்ததன் மூலம் பூணூல்தான் புனிதத்தின் அடையாளம் என நிலைநாட்ட விரும்பும் கூட்டத்தினர் பொதுவாகவே அனைத்து மனிதர்களும் சமம் என்ற அரசமைப்பு சட்ட விழுமியத்திற்கு எதிராகவே உள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவியும் இந்த நிகழ்ச்சியின் அங்கமாக இருந்துள்ளார். ஒடுக்கப்பட்ட அடித்தட்டு மக்களை  இந்தச் செயல் இழிவுபடுத்துகிறது.” என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com