எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தீர்மானத்தால் என்ன பலன்? பாஜக-வுக்கு கோரிக்கை வைத்த எடப்பாடி!

“நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தைக் கொண்டுவராமல், மீண்டும் 3ஆவது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்.” என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகள் விவகாரம் தற்போது தேசிய அளவில் பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது. ஒருபக்கம், மாணவர்கள் போராட்டம் நடத்த, மறுபக்கம் நாடாளுமன்றத்தில் நீட் முறைகேடு தொடர்பாக தனி விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன.

இத்தகைய சூழலில், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு விலக்கு பெறுவோம் என்று கூறி தமிழக அரசு, இது தொடர்பாக சட்டமன்றத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டி இன்று தனித் தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை முற்றிலுமாக ரத்துசெய்ய மசோதா நிறைவேற்றுமாறு பா.ஜ.க கூட்டணி அரசுக்கு அ.தி.மு.க சார்பாக வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில், “நீட் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், பிறப்பித்துள்ள உத்தரவுகள், நீட் தேர்வு குறித்த முறைகேடுகள் தொடர் அம்பலம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்திருப்பது, நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கம், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு என தொடர்ச்சியான நிகழ்வுகள் சொல்கின்ற செய்தி ஒன்றுதான், `நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று'.

38 எம்.பி-க்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போடாத தி.மு.க, தற்போது 40 எம்.பி-க்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தைக் கொண்டுவராமல், மீண்டும் 3-வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்... இந்தத் தீர்மானம் இந்த விடியா தி.மு.க அரசின் மற்றுமொரு அரசியல் நாடகம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை மடைமாற்ற நினைக்கும் இது போன்ற பயனற்ற அரசியல் வித்தைகளை மக்கள் இனியும் நம்புவதாக இல்லை. நீட் தேர்வை நாடாளுமன்றம் மூலம் மறுபரிசீலனை செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே தாக்கல்செய்து நிறைவேற்ற மத்திய பா.ஜ.க கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியால் கடந்த 2010-ல் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என அனைத்துத் தளங்களிலும் தொடர்ச்சியான முன்னெடுப்புகளை மேற்கொண்ட ஒரே இயக்கம் என்ற அடிப்படையில், ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு ஒழியும் வரை அ.தி.மு.க-வின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com