அந்திமழை இளங்கோவன் மறைவுக்கு கி. வீரமணி இரங்கல்!

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி
திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி
Published on

அந்திமழை நிறுவனரும் பதிப்பாளருமான அந்திமழை இளங்கோவன் மறைவுக்கு திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:

‘'அந்திமழை' மாத இதழின் நிறுவனரும் நிறுவிய ஆசிரியருமான தோழர் ந.இளங்கோவன் (வயது 55) அவர்கள் 28.07.2024 அன்று மாரடைப்பால் பெங்களூரில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

தமிழில் அண்மைக்காலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் தரமான மாத இதழ் என்ற சிறப்புக்குரியது அந்திமழை ஆகும். தமிழ்நாட்டின் தென் மாவட்டமான திருநெல்வேலியில் பிறந்து, கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் படித்து, முக்கியமான நிறுவனங்களில் பணியாற்றி, பிறகு தொழில் முனைவோராக உயர்ந்தவர்.

தொழிலில் வெற்றி பெற்று, முன்பு கல்லூரிக் காலத்தில் தான் நடத்தி வந்த அந்திமழை கையெழுத்துப் பிரதியை அச்சு இதழாகக் கொண்டு வந்து வணிக சமரசங்களுக்கு ஆட்படாமல் நல்ல பத்திரிகையாளர்களைக் கொண்டு, தரமான எழுத்துகளைப் பதிப்பித்த நம்பிக்கைக்குரிய இதழாசிரியராக உருவாகி வளர்ந்து வந்தார்.

அந்திமழை இளங்கோவன்
அந்திமழை இளங்கோவன்

திராவிட இயக்கம் பற்றிய பல்வேறு செய்திகளை, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றுச் சூழலை சரியாகப் பதிவு செய்தது அவருடைய ஏடு. ‘அந்திமழை’யின் நிகழ்ச்சிகளுக்கு நம்மை அழைத்து மகிழ்ந்ததும் உண்டு.

இளைய வயதில் அவருடைய மறைவு தமிழ் இதழியல் உலகிற்குப் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் ‘அந்திமழை’ இதழின் பொறுப்பாளர்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.’ என்று கி. வீரமணி கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com