தென்கோடி மாவட்ட மழை- 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!

தென்கோடி மாவட்ட மழை- 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்!

Published on

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 8 மூத்த ஐ.எ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

”இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

அதி கனமழையினை எதிர்கொள்ள முதலமைச்சர் அவர்களது அறிவுரையின் பேரில், பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும், உடன் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், மழை நீர் விரைவில் வடிவதை உறுதி செய்யவும், அனைத்துத் துறைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காகவும் பின்வரும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்:

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு நாகராஜ், திருநெல்வேலிக்கு இரா. செல்வராஜ், தூத்துக்குடிக்கு பா.ஜோதி நிர்மலா தென்காசிக்கு சுன்சோங்கம் ஜதக் சிரு ஆகிய ஐ.ஏ.எஸ்.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை விரைந்து செயல்படுத்த ஊரக வளர்ச்சி இயக்குநர், பேரூராட்சிகளின் இயக்குநர் மற்றும் நகராட்சிகளின் இயக்குனரையும், கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையரையும் இம் மாவட்டங்களில் இருந்து பணிபுரிய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:

கோ. பிரகாஷ், பொன்னையா, கிரண் குராலா, சு.சிவராசு ஆகிய ஐ.ஏ.எஸ்.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகனமழை பெய்து வரும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 90 வீரர்கள் கொண்டு 3 குழுக்களும், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும் விரைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு, தேசிய பேரிடர் மீட்புப் படையின் 50 வீரர்கள் கொண்ட தலா இரண்டு குழுக்களும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக விரைந்துள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், அதிகனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்கு தேவையான பால் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்களையும், போதுமான படகுகளையும் நிலைநிறுத்த வேண்டும்.

ரொட்டி, பிஸ்கெட், தண்ணீர் பாட்டில்கள், பால் பவுடர் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும்.

மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்

பொது மக்களுக்கான அறிவுரை

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிருவாகத்தின் அறிவுரையின் பேரில் முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்

முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

ஆபத்தான இடங்களிலும், நீர்நிலைகளுக்கு அருகிலும் தன்படம் (செல் ஃபி) எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

அவசர உதவிக்கு பின்வரும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்

மாநில அவசரகால செயல்பாட்டு மையம் – 1070

வாட்ஸ் அப் எண். – 94458 69848

மாவட்ட அவரகால செயல்பாட்டு மையம் – 1077

மேற்சொன்ன மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதோடு, கனமழையின் தாக்கத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிருவாகங்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com