இதுக்கு முடிவே இல்லையா?... தொடர் கதையாகும் மீனவர்கள் கைது!

இதுக்கு முடிவே இல்லையா?... தொடர் கதையாகும் மீனவர்கள் கைது!
Published on

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு பெற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இதற்கிடையில் இலங்கை கடற்படையினரின் அத்துமீறிய நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த நில நாள்களுக்கு முன்னர் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ராமேசுவரம் தனுஷ்கோடியிலிருந்து சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 25 பேரை கைது செய்தனர். மேலும் 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீனவர்கள் 25 பேர் சிறைபிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

இந்த ஆண்டு மட்டும் ஜனவரி தொடங்கி இன்றைய தேதி வரையில் தமிழக மீனவர்களின் 32 படகுகளையும், 238 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com