இனிப்புக்கும் காரத்துக்கும் தனித்தனி ஜிஎஸ்டி போடுறீங்களே? நிதியமைச்சரிடம் கொங்கு தமிழில் குமுறல்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - அன்னபூர்னா உணவக குழும தலைவர் சீனிவாசன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் - அன்னபூர்னா உணவக குழும தலைவர் சீனிவாசன்
Published on

கோரிக்கை வைத்தாலே சீரியஸாக ஆகிவிடும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அவரே ரசித்து சிரிக்கும்படி கொங்கு தமிழில் கோரிக்கை வைத்திருக்கிறார் அன்னபூர்னா குழும தலைவர் சீனிவாசன். இவரின் சாமர்த்தியமான பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஜி.எஸ்.டி. வருமான வரி, வங்கி மற்றும் காப்பீடு ஆகியவற்றில் தொழில்துறையினர் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து தொழில்துறையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். இந்தக் கூட்டத்தில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டார்.

கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த கூட்டத்தில் 30 தொழில் முனைவோர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தாங்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் எடுத்துரைத்தனர்.

அப்போது பேசிய தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவரும், கோவை அன்னபூர்னா உணவக குழும தலைவருமான சீனிவாசன், “ஒரே மாவில் ஒரே மாஸ்டர் தயார் செய்த வெவ்வேறு வகையான உணவுகளுக்கு வேறு வேறு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பதால் பில் அடிக்கும் போது கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம்” என்று கூறினார்.

மேலும்,“உங்க பக்கத்துல உள்ள எங்க தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் எங்களது ரெகுலர் கஸ்டமர். அவர் வர்றப்ப எல்லாம் எங்களோட சண்டை போடுறாங்க.

ஸ்வீட்டுக்கு ஐந்து சதவிகிதம் ஜிஎஸ்டி வச்சிருக்கீங்க. உணவுக்கு ஐந்து சதவிகிதம். காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி. பிரட் பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை… ஆனால், மீதியெல்லாத்துக்கும் 28 % ஜி.எஸ்.டி. வச்சிருக்கீங்க.

அவங்க (வானதி சீனிவாசன்) வர்றாங்க.. ஜிலேபி சாப்பிடுவது, அப்புறம் காபி, காரம் சாப்பிடுவது. ஜிலேபிக்கு 5% ஜிஎஸ்டி, காரத்துக்கு மட்டும் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்றால் சண்டைக்கு வருவது என்பது தினசரி நடக்கின்றது.

ஒரே பில்லில் ஒரு குடும்பத்திற்கு ஒவ்வொரு ஐட்டத்துக்கும் வெவ்வேறு மாதிரி ஜி.எஸ்.டி. பில் கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது.

பிரெட், பண்ணுக்கு ஜிஎஸ்டி கிடையாது அதற்குள் கிரீம் வைத்தால் அதற்கு 18% ஜிஎஸ்டி. இதை காணும் வாடிக்கையாளர்கள் ஜாமையும் கொடுத்துவிடு நானே வைத்துக் கொள்கிறேன் என்கிறார்கள். கடை நடத்த முடியவில்லை மேடம்.

எல்லாவற்றுக்கும் ஜி.எஸ்.டி.யை ஏற்றி விட்டாலும் பரவாயில்லை ஒரே மாதிரியா பண்ணுங்க மேடம். வடநாட்டில் அதிகம் ஸ்வீட் சாப்டுறாங்க, அதனால்தான் ஸ்வீட்டுக்கு 5 சதவீதம் காரத்துக்கு 12 பண்ணிட்டாங்க என்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஸ்வீட், காரம், காபிதான். தயவு செய்து இதை கருத்தில் எடுத்துங்க மேடம்.

ஜி.எஸ்.டி. போட்டிறீங்க ஒரு ஃபேமிலி வந்து உணவு சாப்பிட்டு விட்டு திரும்பினால் பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுதுங்க. எனவே தயவு செய்து இதனை பரிசீலனை செய்யுங்கள்” என்றார்.

“இன்புட் கிரெடிட் எடுக்கும் பொழுது அதே கிச்சன், அதே கடலை மாவு, அதே மைதா மாவு, அதே ஸ்வீட் மாஸ்டர் என இருக்கும் பொழுது அதிகாரிகளும் திணறுகிறார்கள். அவர்களுக்கும் உதவும் வகையில் ஜிஎஸ்டி குளறுபடிகளை சரிசெய்யுங்கள்.” என கொங்கு தமிழில் சீனிவாசன் பேசியது இணையத்தில் வைரலாக, “சீனிவாசனின் பேச்சு ஒன்றும் நகைச்சுவை இல்லை, முக்கியமான பிரச்சனை என்று அமைச்சருக்குப் புரிய வையுங்கள்.” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com