ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

ரைபிள் பின்பக்கத்தால் தாக்கப்பட்டோம்! ஆளுநர் ரவி வேதனை

Published on

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, “குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும்.” எனப் பேசியதாகத் தகவல் வெளியாகி, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “தமிழ்நாடு ஆளுநர் குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் எனப் பேசியதாக கூறப்படும் இது போன்ற செய்திகளை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு, தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி செய்திகளால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது. இது போன்ற தவறான தகவல்களை பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களைத் தவறாக வழிநடத்துகிறது மற்றும் அமைதியின்மையை உருவாக்குகிறது.

இந்த போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்தப் பிரச்னையை உடனடியாக எங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக பொதுமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறது.

நெருக்கடிநிலை

ஆளுநர் மாளிகையின் எக்ஸ் தளத்தில் எமெர்ஜென்சியை நினைப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள பதிவில், “50 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூன் 25, 1975 அன்று இந்த கருப்பு தினத்தில், அரசியலமைப்பை தூக்கியெறிந்தும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கியும், ஊடகங்களின் வாயைக் கட்டியும், நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியிலும் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை தேசம் அதிர்ச்சியுடனும் திகிலுடனும் நினைத்துப் பார்க்கிறது.

ஆயுதமேந்திய ராணுவத்தினர் எங்கள் விடுதிக்குள் புகுந்து, விடுதி அறைகளை உதைத்து திறந்து, ரைஃபிள் துப்பாக்கியின் பின்பக்கத்தால் தாக்கி, புத்தகங்கள், உடைகளை கூட எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் எங்களை உடனடியாக வெளியேற்றிய நாளை நானும் எனது பல்கலைக்கழக நண்பர்களும் எப்படி மறக்க முடியும்? சொந்தப் பிள்ளைகளாலேயே முதுகில் குத்தப்பட்டு பாரத மாதா கண்ணீர் வடித்த நாள் அது. நமது தேசிய வரலாற்றின் இந்த கருப்பு அத்தியாயத்தை யாரும் நினைத்துக்கூட பார்க்காத வகையில் நமது தாய்நாட்டின் கண்ணியத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கான உறுதியுடன் இந்த நாளில் துக்கம் அனுசரிப்போம்.” என்று கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com