ஆளுநர் விருந்து புறக்கணிப்பு- கட்சிகள் அதிரடி!

ஆளுநர் ஆர். என். ரவி
ஆளுநர் ஆர். என். ரவி
Published on

சுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., ம.ம.க. ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில உரிமைக்கும் தமிழக அரசுக்கும் எதிராக செயல்படுவதாக அரசியல் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர். என். ரவி கொடுக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், திமுக இது தொடர்பாக இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இது தொடர்பாக காங்கிரஸ், சி.பி.எம்., ம.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் பின்வருமாறு:

கு. செல்வப்பெருந்தகை - காங்கிரஸ்

சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். அவரது அழைப்பிற்கு நன்றி.

ஆனால், கடந்த எழுபதாண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கட்சி அரசியல் சார்ந்ததாக அமைவதில் மக்களாட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்படுகிறது.

 அவ்வகையில் தமிழ்நாட்டின் ஆளுநராக பதவியேற்ற நாளிலிருந்து தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராகவே தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் இருக்கின்றன.

மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பதில் முட்டுக் கட்டை போடுவாதால், பட்டப்படிப்பு முடிந்தும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு நிகழ்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், ஆளுநர் பதவிக்காலம் முடிந்தும் அந்தப் பதவியில் தொடர்வது அரசமைப்புக்கு எதிரானது.

அதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக புறக்கணிக்கிறது.

கே. பாலகிருஷ்ணன் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி

கூட்டாட்சியை/அரசியலமைப்பை மதிக்காத ஆணவப்போக்கு கொண்ட ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவியில் நீடித்துப்பதே இழுக்கு எனும் நிலையில் அவரோடு தேனீர் விருந்து என்ற பேச்சுக்கே இடமில்லை. சி.பி.ஐ(எம்) அவருடைய அழைப்பை மீண்டும் நிராகரிக்கிறது.

இரா.முத்தரசன் - இந்திய கம்யூனிஸ் கட்சி

நாட்டின் விடுதலை நாளான சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுவாழ்வு பிரமுகர்களுக்கு தேனீர் விருந்து வழங்குவது ஆளுநரின் வழக்கமான நடவடிக்கையாகும். அதன்படி நாளை மறுநாள் (15.08.2024) நடைபெறும் சுதந்திர தின விழாவையொட்டி, ஆளுநர் தேனீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது ஆளுநர் பொறுப்பில் உள்ள திரு.ஆர்.என்.ரவி, கடந்த 2019 ஜுகல மாதம் தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து, மக்கள் உணர்வுக்கு எதிராகவும், ஜனநாயக முறைகளை நிராகரித்தும் அதிகார அத்துமீறவில் ஈடுபட்டு வருகிறார். இவரது அத்துமீறல் நடவடிக்கைகளை எதிர்த்து தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் தொடர்ந்து தீவிரமான போராட்டங்களை நடத்தி வருகின்றன.

தமிழ்நாடு சட்டமற்றப் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களும், சட்ட மசோதாக்களும் உரிய முறையில் ஏற்கப்படாமல் மக்களாட்சி மாண்புக்கும், மரபுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். மாநில உரிமைகளை நிலைநாட்ட சட்டப் போராட்டம் நடத்தும் நெருக்கடியை உருவாக்கி வருகிறார்.

அறிவுத் துறையில் திறன் மிகுந்த இளைய தலைமுறையை உருவாக்கும் முயற்சிகளை சிதைக்கும் முறையில் பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க தடை ஏற்படுத்தி வருகிறார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக போட்டி அரசை நடத்தி வருகின்றார்.

ஆளுநர் ஆளுநராக செயல்படாமல் பாஜகவின் ஊது குழலாக செயல்படுகின்றார்.

இந்த நிலையில் ஆளுநர் வழங்கும் தேனீர் விருந்தை புறக்கணித்து, அவரது ஜனநாயக விரோக செயலுக்கு கண்டனம் தெரிவிப்பது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

எம்.எச். ஜவாஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சி

விடுதலை திருநாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் ஆளுநர் தேநீர் விருந்திற்குஅழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஆளுநர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் நலன் குறித்த எந்தவிதமுன்னெடுப்புகளையும் செய்வதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல்கிடப்பில் போட்டுள்ளார்.

தான்  சார்ந்த கொள்கையினைப் பரப்பும் ஒரு பிரச்சாரகர் போலச் செயல்படுகிறாரே தவிரஆளுநரின் பொறுப்புணர்ந்து செயல்படவில்லை. 

பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனம், பட்டமளிப்பு விழாக்கள் நடத்துவதுஉள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் தமிழ்நாடு அரசுக்கு எதிரான நிலைப்பாட்டையேஆளுநர் அவர்கள் எடுத்து வருகிறார். மாணவர்களின் நலனை விட அவர் தான்  சார்ந்தசித்தாந்த செயல்பாடுகளையே முனைப்பாகச் செயல்படுத்தி வருகிறார்.

பல்வேறு துறைகளில் வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை இன்று வரை வழிநடத்துவது திராவிடச் சித்தாந்தமே. திராவிடச் சித்தாந்தத்திற்கு எதிராகத் தொடர்ந்துவெளிப்படையாகக் குரல் கொடுத்து வருகிறார். தனது பதவிக் காலம் முடிந்த பின்னரும்இன்னும் பதவியில் நீடித்து இருப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது. எனவேமனிதநேய மக்கள் கட்சி ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com