புதிய கல்விக் கொள்கையில் இணைய நிர்பந்தம் - மகேஷ் புகார்!

Minister Anbil Mahesh Poyyamozhi
அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ்
Published on

புதிய கல்விக் கொள்கையில் இணைந்தால்தான் நிதி தரப்படும் என மத்திய அரசு நிர்பந்திப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும். அதன்படி, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பிக்களுடன் சென்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசுக்கு இதுதொடர்பாக நேற்று கடிதம் எழுதினார். ஆனாலும் மத்திய அரசு சார்பில் வழங்கிய வேண்டிய நிதி இன்னும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு செயல்படுத்தாததன் காரணமாகவே நிதி நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:

"ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் படி தமிழகத்துக்கு தரவேண்டிய 573 கோடி ரூபாயை இன்னும் மத்திய அரசு கொடுக்கவில்லை. அதனால் தான் ஒரு மாதத்திற்கு முன்பாக தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலை ஏற்று நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் திருச்சி எம்.பி துரை வைகோ உள்ளிட்ட தோழமைக் கட்சிகளைச் சார்ந்தவர்களை அழைத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் சந்தித்து கோரிக்கை வைத்தோம்.

கல்வி திட்டங்களுக்காக வரவேண்டிய நிதியை நீங்கள் நிறுத்தி விடக்கூடாது. பல லட்சம் பிள்ளைகளுடைய கல்வி சார்ந்த விஷயம். இதில் அரசியல் செய்யக்கூடாது என்று நேரடியாகவே வலியுறுத்தி இருந்தோம். அவர்களும் பார்க்கிறோம், சொல்கிறோம் என்று சொன்னார்கள். அதன் பிறகு அதுபற்றி எதுவுமே சொல்லவில்லை, செய்யவில்லை. இருந்தாலும் துறை சார்பாக பல்வேறு முறை கடிதங்கள் எழுதி இருக்கிறோம். அதற்கும் உரிய பதில்கள் வரவில்லை.

ரூ. 573 கோடி மட்டுமல்ல கடந்த ஆண்டு நமக்கு வர வேண்டிய கடைசி தவணையான 249 கோடியையும் மத்திய அரசு தரவில்லை. ஆனாலும் இருக்கும் நிதியை வைத்து, தமிழக அரசு சார்பில் சிறப்பாக செயலாற்றி வந்தோம். என்ன செய்தாலும் சிறப்பாகச் செயல்படுகிறார்களே என்று யோசித்து, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கையில் எடுத்துள்ளது.

நீங்கள் தேசிய கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் உடனே நிதி தருகிறோம் என ஒன்றிய கல்வித்துறை தெரிவிக்கிறது. இன்றைக்கு ஏதோ காரணத்தைச் சொல்லி தேசிய கொள்கையில் வந்தால் தான் தருவேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்?

கடந்த மூன்று ஆண்டு காலமாக கடுமையான நிதிச் சுமையில் தமிழக அரசு உள்ளது. அதேபோன்றுதான் கல்விக்கான நிதிச் சுமையையும் சமாளிக்கப் போகிறோம். கடுமையான நிதிச் சுமைகள் வந்தாலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்தையும் இந்த அரசும் தமிழக முதலமைச்சரும் செய்வார்கள்.

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தச் சொல்வது என்பது தேன்கூட்டில் கை வைப்பது போன்றது. மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது" என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com