முண்டாசுக் கவிஞரின் பெயரை வச்சிகிட்டு இப்படியா...? -ஜெயக்குமார் ஆவேசம்!

Jeyakumar - R.S. Bharathi
ஜெயக்குமார் - ஆர்.எஸ். பாரதி
Published on

முண்டாசுக் கவிஞரின் பெயரை வைத்துக்கொண்டு நாலாந்தரப் பேர்வழியாக ஆர்.எஸ். பாரதி பேசுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகக் கூறியுள்ளார்.

ஆர்.எஸ். பாரதி முதலில் உங்களது கண் பார்வையைப் பரிசோதிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“வாய் வீச்சு, அட்டைக் கத்தி பாரதி என்று அழைக்கப்படும் ஆர்.எஸ். பாரதி, முண்டாசுக் கவிஞரின் பெயரை வைத்துக்கொண்டு, தான் ஒரு வழக்கறிஞருக்குப் படித்தவர் என்பதையும் மறந்து, நாலாந்தரப் பேர்வழியாக, தான் இன்னும் திமுகவில் இருக்கிறேன் என்பதை அவ்வப்போது உணர்த்தும் விதமாக கோபாலபுரத்து கொத்தடிமை நர்த்தனம் ஆடியுள்ளது. வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில், முதலமைச்சர் ஆகியுள்ள மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்குக் கொண்டு வருகிறேன் என்று அமெரிக்கா போய் சைக்கிள் ஓட்டியும், டைட்டானிக் கப்பல் பட ஹீரோ போல் இரு கைகளையும் நீட்டி போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி, சுய விளம்பரம் தேடுவதையும் ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன.

வேலை வாய்ப்புகள் பற்றி விளக்குமாறும், வெளிநாட்டு சுற்றுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

கடந்த வாரம் மத்திய அமைச்சர் ஒருவர் இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவான மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் கேரளா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவதாக ஆந்திரப் பிரதேசம், மூன்றாவதாக குஜராத், நான்காவதாக ராஜஸ்தான், ஐந்தாவது மாநிலமாக திரிபுரா மற்றும் உத்தரப் பிரதேசம் இடம் பெற்றுள்ளன. தமிழகம் இப்பட்டியலில் இடம் பெற்றதாகவே தெரியவில்லை. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், இந்தியாவின் மிகவும் தொழில் மயமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு தற்போது இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. இதை நேரடியாக ஏற்கவோ, மறுக்கவோ வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுவரை வாய் திறக்கவில்லை. ஆனால், திமுகவில் தான் இருக்கிறேன் என்ற போர்வையில், நேரடியாக பதில் அளிக்க வக்கற்ற பாரதி, முதலமைச்சர் அமெரிக்காவில் சைக்கிள் ஒட்டுவதை பார்க்கவில்லையா என்று எங்கள் கழகப் பொதுச் செயலாளரைப் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.

எங்களுக்கு கண்கள் இரண்டும் தெளிவாக இருப்பதால்தான், அமெரிக்காவிலும் மோட்டார் வைத்த சைக்கிளில் மிதிப்பது போன்று முதலமைச்சர் நடிப்பதைப் பார்த்து விமர்சனங்கள் எழுந்துள்ளதை பேட்டியின்போது எடப்பாடி சுட்டிக்காட்டினார். ஆர்.எஸ். பாரதி அங்கம் வகிக்கும் கட்சியின் தற்போதைய தலைமைக்கு துதிபாடும் கூட்டத்தைப் போன்ற 'கருத்துக் குருடர்கள் நாங்கள் அல்ல. தமிழக மக்களின் நம்பிக்கை நாயகராக எடப்பாடியாரை எகத்தாளமாக 'குருடர் என்று சொன்னதன் மூலம் பார்வையற்ற சமுதாயத்தையே இழிவுபடுத்தியுள்ளார், பித்தம் தலைக்கேறிப் போயுள்ள மதி கெட்ட பாரதி.

ஆர்.எஸ். பாரதி முதலில் உங்களது கண் பார்வையை பரிசோதித்து, முதலமைச்சரின் நான்கு வெளிநாட்டுப் பயணங்களின் அடிப்படையில், தமிழ்நாடு பெற்றுள்ள உண்மையான முதலீட்டைப் பட்டியலிட உங்கள் முதலமைச்சரையோ அல்லது தொழில் துறை அமைச்சரையோ நீங்கள் கேட்டு, உண்மை நிலையை தமிழக மக்களிடம் எடுத்துரைக்க வலியுறுத்துகிறேன். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த அனைத்து உண்மைகளும் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும்.” என்று ஜெயக்குமாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com