எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஆரிய - திராவிட சர்ச்சை: கருத்துக்கூற நான் ஆள் இல்லை - எடப்பாடி பழனிசாமி நழுவல்!

Published on

ஆளுநர் இரவி ஏற்படுத்திய ஆரிய-திராவிட சர்ச்சை குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதற்கு, தன்னால் அதுகுறித்து கருத்துக்கூற முடியாது என்று தெரிவித்தார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இதைப் பற்றியெல்லாம் கருத்துக்கூற புராணம் படிக்கவேண்டும். அந்த அளவுக்கு நான் படித்தவன் அல்ல. இந்தக் கதையை எல்லாம் படித்துச்சொல்ல வேண்டுமென்றால் பெரிய ஆய்வு செய்யவேண்டும். ஆய்வுகள் செய்தால்தான் உண்மையா பொய்யா எனத் தெரியும். அதற்கு நான் உரிய ஆள் அல்ல. ஆளுநரிடம் கேட்கவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் என்ன தெரியும்? ஆரியமா என்னவென்று அறிஞர்களைப் பார்த்து கேட்டால்தான் தெரியும். இது உண்மையா பொய்யா என்பதற்கு ஆய்வுசெய்தால்தான் தெரியும். ஆய்வுசெய்யாமல் கேள்விகளுக்கு தவறான பதிலை நான் கொடுத்துவிடக்கூடாது. யாரைக் கேட்கவேண்டுமோ அவர்களிடம் கேளுங்கள். அவர்களிடம் உங்களுக்கான பதில் கிடைக்கும்.” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

”நீட் தேர்வை ரத்துசெய்வதற்கு எங்களிடம் ரகசியம் இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் சொன்னார். கையெழுத்து வாங்குவதுதான் நீட் ரகசியமா? தி.மு.க. ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள்; இதைத் திசைதிருப்புவதற்காக நீட் கையெழுத்து என நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் முட்டையைப் பரிசாகத் தருவார்கள்.” என்றும் பழனிசாமி கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com