35 மீனவர்கள் கைது- முதல்வர் மீண்டும் கடிதம்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டனர். இதுகுறித்து கடுமையான விசனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவு அமைச்சருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். 

அக்கடிதத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள், IND-TN-10-MO-1825, IND-TN-10-MO-1826, IND-TN-10-MO-1458 மற்றும் IND-TN-10-MO-1487 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட அவர்களது நான்கு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், நேற்று (9.8.2024) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆழ்ந்த வேதனையும் கவலை அளிப்பதாகவும் உள்ளது என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இரண்டு மீனவர்கள் உயிரிழந்த நிலையில், மீனவர் பிரச்சனை தொடர்பாக மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சரை தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சந்தித்ததைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க நிவாரணமோ தீர்வோ ஏற்படவில்லை என்று வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

நமது மீனவர்கள் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்படும் சம்பவங்களால், மீனவக் குடும்பங்கள் மிகுந்த துயரங்களுக்கு ஆளாவதோடு, கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வும், அவர்களது வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவ குடும்பங்களின் மன நம்பிக்கையை குலைத்து, பெருத்த நிதி சுமையை ஏற்படுத்தி, அவர்களது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை கடினமாக்கி உள்ளதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்திடவும், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்; கடலோர மீனவ சமுதாயத்தினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து, தாயகத்திற்கு அழைத்து வருவதை உறுதி செய்திட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com