அறிவாலயத்தில் திருமாவளவன் பேட்டி
அறிவாலயத்தில் திருமாவளவன் பேட்டி

வி.சி.க.வுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஒதுக்கீடு; தனிச் சின்னம்தான் - திருமாவளவன்

Published on

வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. அணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வி.சி.க. தலைவர் திருமாவளவன் இருவரும் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளனர்.

அண்ணா அறிவாலயத்தில் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், இதைத் தெரிவித்தார்.

கடந்த முறை வி.சி.க.வின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தி.மு.க.வின் சின்னத்தில் போட்டியிட்டு தற்போது எம்.பி.யாக இருந்துவருகிறார்.

திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தானே மீண்டும் போட்டியிடப்போவதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இதனிடையே, வரும் தேர்தலில் இரண்டு தனித் தொகுதிகளுடன், ஒரு பொதுத் தொகுதியும் ஒதுக்கவேண்டும் என வி.சி.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதில் இழுபறியாகி நேற்று இரு கட்சிகளின் குழுக்களும் திட்டமிட்டபடி சந்திக்கவில்லை.

இன்று காலையில் முதலில் ம.தி.மு.க.வுடன் உடன்பாடு கையெழுத்தான நிலையில், மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசினார். அதில் இரு தரப்புக்கும் சுமுகமான நிலை எட்டப்பட்டது.

அதையடுத்து, தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் சற்று முன்னர் இரு கட்சிகளின் தலைவர்களும் தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

முன்னரே கூறியபடி தனிச் சின்னத்தில்தான் வி.சி.க. போட்டியிடும் என்பதை திருமாவளவன் இன்றும் உறுதிப்படுத்தினார்.

தமிழ்நாடு மட்டுமின்றி தெலங்கானாவில் 10, கர்நாடகத்தில் 6, கேரளத்தில் மூன்று தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதால், தேர்தல் ஆணையத்தில் பானைச் சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம்; அதை வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com