விக்கிரவாண்டி - தலைமைத் தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு!

விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி
Published on

அடுத்த மாதம் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

அந்த அறிக்கை விவரம்:

”மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், பிரிவு 77-ன்படி,  அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, விமானம் உட்பட்ட போக்குவரத்துச் செலவுகள் கட்சியின் வேட்பாளர், முகவர்கள் கணக்கில் சேராது. இந்தச் சலுகையைப் பெற, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 40 பேரின் பெயர் பட்டியலையும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 20 பேரின் பெயர் பட்டியலையும் தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.

தேர்தல் செலவினத்திலிருந்து விலக்கு பெறவேண்டிய இந்தத் தலைவர்கள் பட்டியலை, மேற்கண்ட சட்டப்பிரிவின் விளக்கம் 2-ன் உட்பிரிவு 1-ன்படி, தேர்தல் அறிவிக்கை வெளியிட்டதிலிருந்து 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கை வரும் 14ஆம் தேதிஅன்று வெளியிடப்படவுள்ளது. செலவுத் தொகையிலிருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பெயர்ப் பட்டியலைத் தெரிவித்து இந்தியத் தேர்தல் ஆணையம் / தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு 21.06.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தப் பட்டியலில் உள்ளவர்களின் பயணச் செலவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இதுதவிர மற்ற செலவினங்கள் அனைத்தும் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். அதே நேரம், வேட்பாளருக்கு வேறு கட்சியின் நட்சத்திரத் தலைவர் பிரச்சாரம் செய்தால், அதில் விலக்கு கோர இயலாது.” என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு தெரிவித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com