முடிவை மாற்றிய பட்ஜெட்... விளாசிய ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், மத்திய நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்க கூடிய பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தாம்பரம்- செங்கல்பட்டு இடையே விரைவு சாலை திட்டத்துக்கான ஒப்புதல் வழங்கவேண்டும் என்ற சில கோரிக்கைகளை வைத்திருந்தேன். ஆனால் எதையுமே பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.

மத்திய பட்ஜெட், ஒட்டுமொத்த இந்தியாவுக்கானதாக இல்லாமல், மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டி பாஜகவாக ஆக்கிய கட்சிகளின் மாநிலங்களுக்கான பட்ஜெட்டாக உள்ளது.

பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இடம் பெறவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மீது பாஜக அரசு ஆத்திரத்தில் உள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரயில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்திற்கு எந்த ஒரு சிறப்பு திட்டங்களும் மத்திய பட்ஜெட்டில் இல்லை.

தமிழ்நாடு குறித்து எந்த சிந்தனையும் பாஜக அரசுக்கு இல்லை என்பதையே பட்ஜெட் காட்டுகிறது. பாஜக கூட்டணி ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய பாஜக அரசின் நிதி நிலை அறிக்கையில் நீதி இல்லை; அநீதி மட்டுமே உள்ளது.

பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு நன்மை செய்யாமல் பெயரளவுக்கு வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் வஞ்சிக்கப்படுவது நாட்டின் கூட்டாண்மை தத்துவத்திற்கு எதிரானது. பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து டெல்லியில் திமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்துவார்கள்.

தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதே சரியாக இருக்கும். தமிழ்நாட்டு மக்களை பட்ஜெட்டில் புறக்கணித்ததால் டெல்லியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன். தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து போராடுவோம்." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

நிதி ஆயோக் கூட்டம்

பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்ற பின்னர் வரும் 27 ஆம் தேதி நிதி ஆயோக்கின் முதல் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

அந்தவகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதன் காரணமாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com