அஸ்வினி வைஷ்ணவ்
அஸ்வினி வைஷ்ணவ்

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு கோடி ஒதுக்கீடு? - அமைச்சர் பதில்!

Published on

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டிய நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கபட்டுள்ள நிதி குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கடந்த 2009-2014ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழ்நாட்டு ரயில்வே மேம்பாட்டு திட்டங்களுக்காக ஆண்டு சராசரி ரூ.879 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி ஆட்சியில் இந்த ஆண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.6,362 கோடி ஒதுக்கி இருக்கிறார். இது முந்தைய ஆட்சியைவிட 7 மடங்கு அதிகம் ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளில் 1,302 கி.மீ. நீளத்துக்கு புதிய ரயில்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 215 கி.மீ. என்ற அடிப்படையில் மொத்தம் 2152 கி.மீ. தூரம் ரெயில் பாதை மின்மயமாக்கப்பட்டு உள்ளது. 687 ரயில்வே மேம்பாலங்களும், சுரங்கப்பாதைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது 22 புதிய ரயில்பாதை திட்டங்கள் ரூ.33,467 கோடிக்கு நடந்து வருகிறது.

அம்பாசமுத்திரம், அம்பத்தூர், சென்னை கடற்கரை, எழும்பூர், பூங்கா, சிதம்பரம், மதுரை, கோவில்பட்டி, ராமேஸ்வரம், நெல்லை உள்பட 77 ரெயில் நிலையங்கள் அம்ரித் ரயில் நிலையங்களாக மாற்றப்படுகிறது. ரயில்வே பாதுகாப்பு விஷயங்களுக்காக நாடு முழுவதும் ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.”என்றார்.

தமிழக ரயில்வே திட்டங்கள் விஷயத்தில் மத்திய அரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,

’தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் வழங்கும் பணியில் சுணக்கம் உள்ளது. மத்திய அரசும், மாநில அரசுகளும் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் இருபக்கமும் பயன்பாடு இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2,749 ஹெக்டேர் நிலம் ரயில்வேக்கு தேவைப்பட்டது. இதில் 807 ஹெக்டேர் நிலம்தான் கிடைத்து இருக்கிறது.

ராமேசுவரம்-தனுஷ்கோடி திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் நிலம் எடுப்பு பிரச்சினைகளால் அந்த திட்டத்தை கைவிடுவதாக தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. ரயில்வேக்கான ஆட்கள் தேர்வும் இந்த ஆட்சியில் அதிகமாகத்தான் நடந்திருக்கிறது." என்று அவர் கூறினார்.

பெரம்பூரில் ரயில் முனையம்

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

'சென்னை சென்ட்ரலில் ஏற்படும் ரயில் போக் குவரத்து நெரிசலைக் குறைக் கும் வகையில் வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், வில்லிவாக்கத்தில் போதிய இட வசதி இல்லாததாலும், தனியாரிடம் நிலம் வாங்க வேண்டும் என்பதாலும், பெரம்பூரில் 4 -ஆவது ரயில் முனையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான நில அளவைப் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் திட்டஅறிக்கை தயாரிக்கப்பட்டு பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றார் அவர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com