7 பேரின் சடலங்களை அவரவரின் சொந்த ஊர்களுக்குச் கொண்டு செல்ல தயார் நிலையில் உள்ள ஆம்புலன்ஸ்கள்
7 பேரின் சடலங்களை அவரவரின் சொந்த ஊர்களுக்குச் கொண்டு செல்ல தயார் நிலையில் உள்ள ஆம்புலன்ஸ்கள்

கொச்சியை அடைந்த 7 தமிழரின் சடலங்கள்: விரைந்த அமைச்சர் மஸ்தான்!

Published on

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் சடலங்கள் கேரள மாநிலம் கொச்சிக்கு வந்த நிலையில், அவரவர் சொந்த ஊர்களுக்கு அவற்றை அனுப்பி வைக்கும் பணிகளை அயலகத் தமிழர் நலத் துறை அமைச்சர் மஸ்தான் மேற்கொண்டுள்ளார்.

குவைத்தின் மங்காஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 49-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்தது. இதில், 31 பேரின் உடல் தனி விமானம் மூலம் இன்று கொச்சிக்கு கொண்டுவரப்பட்டன.

கேரளத்தைச் சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரின் உடல்கள் இதில் அடக்கம்.

தூத்துக்குடியைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், கடலூரைச் சேர்ந்த சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கர் கோவிந்தன், திண்டிவனத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு, திருச்சியை சேர்ந்த ராஜூ எபநேசன், பேராவூரணியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகிய 7 பேரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் மேற்கொண்டு வருகிறார். அதற்காக அவர் கொச்சிக்குச் சென்றுள்ளார். அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை அவர் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் 7 பேர் குடும்பங்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com