பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் இறுதிச் சுற்றில், இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். அவர் 451. 4 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்தார்.
சீனாவின் லியு யுகன் 463.6 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். உக்ரைன் வீரர் குலீஷ் 461 புள்ளிகள் பெற்று வெள்ளி வென்றார்.
ஸ்வப்னில் குசாலே கலந்து கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தியுள்ளார். கெய்ரோவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்ததன் மூலம் இவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் மனு பாகர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதன்பின், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் மனு பாகர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது. தற்போது குசாலே வெண்கலப் பதக்கம் வென்றிருப்பதன் மூலம், துப்பாக்கிச் சூடு போட்டியில் மட்டும் இந்தியா மூன்று வெண்கல பதங்களை முதல் முறையாக வென்றுள்ளது. இதற்கு முன், 2012இல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ககன் நரங் மற்றும் விஜய் குமார் வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றனர்.
தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 41-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் நடைபெற்று வருகிறது. 26ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் திருவிழா ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறும். பிரான்ஸ் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.