குமார் போஸ்
குமார் போஸ்

‘தவறான பாதையில் செல்கிறது’- சுபாஷ் சந்திரபோஸ் பேரன் பா.ஜ.க.விலிருந்து விலகினார்!

Published on

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன், சந்திரபோஸ் பாஜகவிலிருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக பாஜக தேசியச் செயலர் ஜெ.பி. நட்டாவுக்கு சந்திரபோஸ் எழுதியுள்ள ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ''பிரதமர் நரேந்திர மோடியின் பரந்த திட்டங்களால் ஈர்க்கப்பட்டு 2016இல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தேன்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சரத் சந்திரபோஸ் ஆகியோரின் ஒருங்கிணைந்த கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் பாஜகவில் செயல்பட்டேன். ஆனால், அதை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் கொள்கைப்படி மதம், சாதி, கோட்பாடுகளைக் கடந்து ஆசாத் ஹிந்த் மோர்ச்சா என்ற அமைப்பின்கீழ் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க நினைத்தேன். நாட்டின் ஒற்றுமைக்கு இது மிகவும் அவசியம்.

இந்த இலக்கை எட்ட மத்திய மற்றும் மாநில பாஜக எந்தவகையிலும் எனக்கு உதவவில்லை. மாநில மக்களை இணைக்கும் வங்காள வியூகத்தை பாஜவிடம் பரிந்துரைத்தேன். ஆனால், என் பரிந்துரை நிராகரிக்கப்பட்டது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

2016 முதல் 2020 வரை மேற்கு வங்க மாநில பாஜக துணைத் தலைவராக செயல்பட்டார் சந்திரபோஸ். 2016 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com