நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம்

நீட் தேர்வு: கருணை மதிப்பெண் ரத்து; 1,563 மாணவர்களுக்கு மறுதேர்வு!

Published on

நீட் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் சில தேர்வு மையங்களில் தேர்வு நேரம் குறைவாக வழங்கப்பட்டதால் 1,563 மாணவர்களுக்குத் தேசிய தேர்வு முகமை 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண்ணாக வழங்கியது. இதற்கு நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது.

கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரத்தைத் தெளிவுபடுத்தும் வரை, இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, நீட் தேர்வு குளறுபடியை சுட்டிக்காட்டியும், மறுதேர்வு நடத்த வலியுறுத்தியும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, அந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை, பிகார் மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தேசிய தேர்வு முகமை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதிலில், தோ்வு மையங்களில் சில தோ்வா்கள் நேரத்தை இழந்ததால் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும், விசாரணைக் குழுவின் அறிக்கையின்படி, அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், நேரக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கும் ஜூன் 23-ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்றும், விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மறுதேர்வு முடிவுகள் 30-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மறுதேர்வுக்கான அறிவிப்பாணையை இன்றே வெளியிட உத்தரவிட்டனர். மேலும், ஜூலையில் மருத்துவ கலந்தாய்வு நடப்பதால் ஜூன் 30-க்குள் முடிவுகளை வெளியிடுவதை உறுதி செய்ய அறிவுறுத்தினர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com