பா.ஜ.க. இப்படித்தான் வெற்றி பெற்றதா?...காங் குற்றச்சாட்டு

பா.ஜ.க. இப்படித்தான் வெற்றி பெற்றதா?...காங் குற்றச்சாட்டு
Published on

மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சந்தீப் தீக்ஷித் டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கணிசமான வித்தியாசம் இருப்பது தெரியவந்துள்ளது. 'வோட் பார் டெமாக்ரசி' என்ற அமைப்பின் ஆய்வறிக்கையின் படி, தலைமைத் தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் முதலில் கூறியதற்கும், பின்னர் அளித்த இறுதி புள்ளிவிவரங்களுக்கும் இடையே சராசரியாக 4.7 சதவீதம் வித்தியாசம் உள்ளது.

இது தேசிய அளவில் சுமார் 5 கோடி வாக்குகளாகும். 'வோட் பார் டெமாக்ரசி' என்ற அமைப்பு பாஜக வெற்றி பெற்ற 79 தொகுதிகளை குறிப்பாக அடையாளம் கண்டுள்ளது.

ஒடிஸா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 12.5 சதவீதம் வரை வித்தியாசம் உள்ளது. லட்சத்தீவு உள்ளிட்ட சில இடங்களில் 25 சதவீதம் வரையிலும் பெரிய வித்தியாசம் இருப்பது தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.

மக்களவைத் தேர்தலில் முதல் கட்டத்தின் இறுதி புள்ளிவிவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் 11 நாட்கள் எடுத்துக் கொண்டது. இரண்டாவது கட்டத்திற்கு 6 நாட்கள் மற்றும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு 4 முதல் 5 நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மக்களவைத் தேர்தலில் இறுதி வாக்குப்பதிவு விகிதத்தில் குளறுபடி செய்து பாஜக 79 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவின் ஆரம்ப மற்றும் இறுதி தரவுகளில் ஒரு சதவீத வித்தியாசம் மட்டுமே இருந்தது. எனவே, இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை எனில் நீதிமன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்." என்றார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com