இந்தியன் - 2 பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன்
இந்தியன் - 2 பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன்

‘ஊழல் அதிகமாகிடுச்சு…அரசியலுக்கு நன்றி!’- இந்தியன் கமல்

Published on

ஊழல் அதிகமானதால் தான் இந்தியன் -2 வருவதாக நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் - 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது.

இந்த நிலையில், நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர் சந்தித்தனர்.

அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன், “ஒரு சினிமாவை செய்து விட்டு, அதனை இரண்டாவது முறையாகச் செய்யும் போது, அதனை அதே இயக்குநர் இயக்குவது என்பது எனக்குத் தெரிந்து, இரண்டு பேர் அதனை செய்திருக்கிறார்கள். ஒருவர் செசில் பி டிமில் (Cecil B Demille), இன்னொருவர் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் (Alfred Hitchcock). 39 ஸ்டெப்ஸ் என்ற படத்தை முதலில் கருப்பு, வெள்ளையாக எடுத்த ஹிட்ச்காக், பின்னர் கலரில் எடுத்தார். அதேபோல செசில் பி டிமில் 10 கமெண்ட்மெண்ட்ஸ் (10 Commandments) என்ற படத்தை முதலில் கருப்பு வெள்ளையாக எடுத்தார். பின்னர் அதனை கலரில் எடுத்தார். இன்று வரையிலும் அந்தப் படம் பேசப்படுகிறது.

இந்த வாய்ப்பு யாருக்கும் அமையாது. அது ஷங்கருக்கு கிடைத்திருக்கிறது. அதனால் எனக்கு கிடைத்திருக்கிறது.

இரண்டாம் பாகம் என்ற ஃபேஷன் வருவதற்கு முன்பே நாங்கள் முதல் பாகத்தை எடுத்துவிட்டோம். ‘இந்தியன்’ படத்தின் முதல் பாகத்தின் டப்பிங் பணிகளின்போதே நான் ஷங்கரிடம் சொன்னேன். ‘சார் இரண்டாம் பாகத்தை எடுத்துவிடலாம்’ என்று.

இரண்டாம் பாகம் எடுப்பதற்கான கருவை எங்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. ஏனென்றால் ஊழல் இன்னும் அதிகமானதால் தான் இந்தியன் தாத்தாவின் இரண்டாம் வருகைக்கு உங்கள் மத்தியில் அர்த்தம் உருவாகியுள்ளது.

நான் மதிக்கும் நல்ல நடிகர்கள் இன்று நம்முடன் இல்லை. அவர்கள் இந்த விழாவில் பங்கேடுத்திருக்க வேண்டியவர்கள். மனோபாலா, நெடுமுடி வேணு, விவேக் போன்றவர்கள் இருந்திருக்க வேண்டியவர்கள். இப்போது தான் விவேக்கின் காட்சிகளை படமாக்கியதாக தோன்றுகிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு ‘இந்தியன்’ சீரிஸ் ஓர் உதாரணம். இயக்குநர் ஷங்கர் இன்றும் இளைஞராகவே இருக்கிறார்.

இந்தியன் தாத்தா
இந்தியன் தாத்தா

இந்தப் படம் 5, 6 வருடங்கள் எடுத்ததற்கு தொழில்நுட்ப கலைஞர்களோ, நடிகர்களோ காரணமில்லை. இயற்கை தான் காரணம். கோவிட், விபத்து என பல விஷயங்கள் இடையூறாக அமைந்தன. இதிலிருந்து எங்களை மீட்டு தோளில் சுமந்து வந்த லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்துக்கு கடமைபட்டுள்ளோம்.

இந்த வெற்றியை அனுபவிக்க வேண்டியவர்கள் அவர்கள். இந்தப் படத்தில் உதயநிதி ஈடுப்பட்டதற்கு காரணம், இந்த இயக்குநரையும், நடிகரையும் அவர் பெரிதாக ரசிக்கிறார் என்பது தான் உண்மை. 100 சதவீத உழைப்பைக் கொடுத்திருக்கிறார் அனிருத். இந்தப் படத்துக்காக உழைத்தவர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு உழைத்ததாக தெரியவில்லை. மாறாக அவர்கள் சந்தோஷமாக உழைத்தார்கள்.” என்று கூறினார் கமல்ஹாசன்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இயக்குநர் ஷங்கர் இந்தியன் முதல் பாகத்தின்போது கமலுக்கு 40 நாட்கள் மேக் அப் போட்டோம். இந்த படத்துக்ககா 70 நாட்கள் போட்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். இந்தியன் 1- இல் வந்த சுகன்யா பாத்திரம் இந்த படத்தில் இல்லை என்றும் அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com