திருச்சி நகைச்சுவை மன்றச் செயலாளர் சிவகுருநாதன் வீட்டுக் கல்யாணத்திற்கு சென்றிருந்தபோது பல முக்கியமான தமிழ்ச் சொற்பொழிவாளர்கள், அறிஞர்கள் வந்திருந்தார்கள். திருவாரூர் சண்முக வடிவேல், சுகிசிவம், மரபின் மைந்தன் முத்தையா என பலரும் முன்வரிசையில் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நானும் இருந்தேன். ஒருபக்கம் மேளச் சத்தம் காதைக் கிழிக்க, மற்றொரு பக்கம் தேவாரம் ஓதிக் கொண்டிருந்தார்கள். யார் பேசுவதும் காதில் கேட்காத அளவுக்கு ஒலியால் அந்த இடம் நிரம்பி இருந்தது.
அப்போது ஒருவர் சண்முகவடிவேல் ஐயாவிடம் வந்து ஏதோ சொன்னார். அவரும் ‘சரிய்யா… சரிய்யா…’ என்று தலையாட்டினார். வந்தவர் உடனே கிளம்பிவிட்டார்.
உடனே சுகிசிவம் ஐயா, சண்முகவடிவேல் ஐயாவிடம், ‘இவ்ளோ சத்தத்தில், அவர் என்ன பேசினாரு? தலையாட்டினீங்க… அவரு பேசுனது உங்களுக்குக் கேட்டுச்சா?’ என்றார்.
சண்முக வடிவேல் அய்யாவுக்கு 88 வயது. எனவே தான் இந்தக் கேள்வி.
அய்யா இதற்கெல்லாமா அசருவார்?
‘வந்தவரைப் பார்த்தால் நல்லவர் மாதிரி தெரியுது. நாம சங்கடப்படுற மாதிரி அவர் எதுவும் சொல்லிருக்க மாட்டார்னு நம்புறேன். அதனால்தான், சரிய்யா… சரிய்யானு’ சொன்னேன் என அவரின் டோனில் அப்பாவித் தனமாகச் சொல்லியது எங்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அந்த சிரிப்பொலியில் மேளச் சத்தமே சற்று அமுங்கித்தான் போனது!
பேராசிரியர் பர்வீன் சுல்தானா, சொற்பொழிவாளர்