அரசியல்

சென்னை திரும்பினார் ஆளுநர் ; இனி சர்ச்சைகளுக்கு குறைவிருக்காது?

Staff Writer

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 7-ந் தேதி ஒரு வார பயணமாக சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ஆளுநரின் இந்த பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக ஆளுநரை நீக்கக்கோரி முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு 19 பக்க கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்தநிலையில் டெல்லியில் தங்கி இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது பயணத்தை முடித்து கொண்டு நேற்று இரவு 8 மணிக்கு சென்னை திரும்பினார். திராவிடமாடல், சனாதானம் குறித்து ஆளுநர் ஏதாவது கருத்துகள் சொல்லி, அது சர்ச்சையாவது தொடர்ந்துவரும் நிலையில், ஆளுநரின் வருகையால் சர்ச்சைகளுக்கு குறைவிருக்காது என சமூக ஊடகங்களில் மக்கள் எழுதிவருகின்றனர்.