பாஜக தலைவர் அண்ணாமலை 
அரசியல்

ஒருவழியாக நடைப்பயண தேதியை அறிவித்தார் அண்ணாமலை!

Staff Writer

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊழலுக்கு எதிராக ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து வரும் நிலையில் பாதயாத்திரைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ராமநாதபுரத்தில் வரும் 28ஆம் தேதி பாதயாத்திரையை தொடங்கும் அண்ணாமலை, அந்த மாவட்டத்தில் 4 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.

31ஆம் தேதி சிவகங்கை செல்லும் அண்ணாமலை மானாமதுரை, திருப்பத்தூர் திருமயம் வழியாக ஆகஸ்ட் 3ஆம் தேதி காரைக்குடி செல்கிறார்.

பின்னர் மதுரை மாவட்டத்தில் 4, 5ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் செல்லும் அண்ணாமலை 6ஆம் தேதி ஓய்வெடுக்கிறார். இதைத்தொடர்ந்து மதுரையில் 7ஆம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அண்ணாமலை உரையாற்றுகிறார்.

பின்னர் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 14ஆம் தேதி வரை நடைபயணம் மேற்கொள்கிறார். இதையடுத்து கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் அண்ணாமலை அடுத்தாண்டு ஜனவரி 11ஆம் தேதி சென்னையில் தனது நடைபயணத்தை நிறைவு செய்கிறார்.

கடந்த ஜனவரி மாதம், ஏப்ரல் 14-ஆம் தேதி பாதயாத்திரை செல்வதாக அறிவித்திருந்த அண்ணாமலை, தற்போது புதிய தேதியை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.