அமைச்சரவைக் கூட்டம் பற்றி ஊடக சந்திப்பு 
அரசியல்

100 நகரங்களில் 10 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் - அமைச்சரவை ஒப்புதல்

Staff Writer

நாடளவில் பத்தாயிரம் மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

பிரதமர் மோடியின் தலைமையில் இன்று நடைபெற்ற மைய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்துக்குப் பின்னர் ஊடகத்தினரிடம் பேசிய தகவல் - ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இத்தகவலைத் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் நோக்கிலான இந்தத் திட்டத்துக்கு, 57ஆயிரத்து 613 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை உள்ள நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தலா 100 நகரங்களில் தலா 100 மின் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

திட்டத்துக்கான மொத்த நிதியில் 20ஆயிரம் கோடி ரூபாயை மைய அரசு வழங்கும் என்றும் அனுராக் தெரிவித்தார்.

இத்துடன், பிரதமர் தன் சுதந்திர தின உரையில் அறிவித்தபடி, நகர- ஊரக கைவினைஞர்களுக்கான கடன் வழங்கும் திட்டத்துக்கு 13ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கவும் மைய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.