சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  நன்றி: தீக்கதிர்
அரசியல்

உதயநிதிக்கு எதிராக 4 பிரிவுகளில் வழக்குப்பதிய டெல்லி போலீசில் புகார்!

Staff Writer

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசியதற்கு எதிராக அவர் மீது வழக்கு பதியுமாறு புதுதில்லி காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழக்குரைஞரான வினீத் ஜிண்டால் என்பவர், சனாதன தர்மத்தைக் கடைப்பிடிக்கும் தன்னுடைய இந்து மத உணர்வை உதயநிதி புண்படுத்திவிட்டதாகவும் இழிவுபடுத்திவிட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

சனாதான தர்மத்தை அழிக்கவேண்டும் என உதயநிதி பேசியிருப்பதும், அதை கொசு, டெங்கு, கொரோனா ஆகியவற்றுடன் ஒப்பிட்டிருப்பதும் சனாதனத்தின் மீதான அவருடைய வெறுப்பைக் காட்டுகிறது என்றும் அவர் தன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பேரவை உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருக்கும் உதயநிதி தன் பதவிப்பிரமாணத்தின்போது நாட்டின் அரசமைப்பைக் காப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டு, அனைத்து மதங்களையும் மரியாதை செய்வதை விட்டுவிட்டு, உள்நோக்கத்துடன் சனாதான தர்மக் கொள்கைக்கு எதிராக அவதூறாகப் பேசியிருக்கிறார்; மதங்களின் அடிப்படையில் இரு பிரிவினருக்கு இடையே பகைமையைத் தூண்டிவிட்டுள்ளார் என்றும்,

சனாதானத்தை எதிர்ப்பது என்றில்லாமல், கொசுக்களை ஒழிப்பதைப் போல, சனாதானத்தை ஒழிக்கவேண்டும் எனப் பேசியதன் மூலம், சனாதானத்தைக் கடைப்பிடிப்பவர்களை இனப்படுகொலை செய்யத் தூண்டிவிட்டுள்ளார் என்றும்

இதனால், உதயநிதி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153 ஏ, பி, 295ஏ, 298, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியவேண்டும் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.