சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி 
அரசியல்

உதயநிதியின் பதவிக்கு நெருக்கடியா?- வடக்கின் 262 முன்னாள் அதிகாரிகள் கடிதம்

Staff Writer

சனாதனத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியதற்கு, வட இந்தியாவில் பரவலாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வட இந்திய ஊடகங்கள் அனைத்திலும் உதயநிதியின் பேச்சுதான், உச்சத்தில் நிற்கிறது. அந்த அளவுக்கு சனாதனத்தின் தாக்கம் அங்கு அதிகமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இதுகுறித்து அந்த அளவுக்கு யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை.

திமுக கூட்டணி கட்சிகள் ஆதரிக்கவும், பாஜக அணி கட்சிகளின் எதிர்க்கவும் செய்கின்றன.

வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் இது திமுகவுக்கு குறிப்பாக உதயநிதிக்கு நல்ல மைலேஞ் என்று கருதப்படும் நிலையில், கூட்டணிக்கு உள்ளேயே வேறுபாடான பார்வைகள் உள்ளம.

காங்கிரஸ் கட்சியானது காந்தியடிகளின் மதப் பார்வைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் கூறிவிட்டது. ஆனாலும் பல மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சனாதனத்தை ஒழிப்போம் என்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதலமைச்சருமான மமதா பானர்ஜி, சனாதன தர்மத்தை தான் மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருந்தாலும், ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்தப் பின்னணியில், ஓய்வுபெற்ற மைய அரசு அதிகாரிகள் குறிப்பாக 100+ இராணுவ அதிகாரிகள் உட்பட மொத்தம் 262 பேர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளனர். அதில், தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு, தமிழக அரசை உதயநீதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் இன்றைய பரபரப்புப் பேச்சுகளில், உதயநிதியின் பெயர்தான் முன்னிலையில் இருந்தது. ஒருவேளை விசாரணை தொடங்கப்பட்டால், அது உதயநிதிக்கு நெருக்கடியாக அமையக்கூடும் என டெல்லி அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் அமைச்சர் உதயநிதிக்கு இரண்டு நாள்களாக அதிக அளவில் கவனம் கிடைத்துள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது.