விசாரணையில் டேவிட் க்ரூஷ் 
உலகம்

அமெரிக்கா வசம் ஏலியன்கள்! ரகசியம் உடைக்கும் ராணுவ அதிகாரி!

Staff Writer

முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் மூன்று பேர் ஏலியன்களின் வாகனம் என்று அழைக்கப்படும் பறக்கும்தட்டுகள் (யுஎப்ஓ) குறித்த விசாரணையில் சொல்லியிருக்கும் விஷயங்கள் புயலைக் கிளப்பியுள்ளன. யுஎப்ஓ தொடர்பான விஷயத்தில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

யுஎப்ஓ எனப்படும் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் தொடர்பாக நேற்று அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் முதல் கட்ட விசாரணை நடைபெற்றது.

இதில், ஓய்வு பெற்ற அமெரிக்க கடற்படை தளபதிகள் கிரேவ்ஸ், டேவிட் ஃப்ரேவர் இருவரும், தாங்கள் ராணுவத்தில் பணியாற்றிய போது அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்களைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், முன்னாள் விமானப் படை உளவுத்துறை அதிகாரியான டேவிட் க்ரூஷ், அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் பற்றிய தனது ஆராய்ச்சியை அரசாங்கம் மூடி மறைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

விசாரணையில் டேவிட் க்ரூஷ் கூறிய விஷயங்கள், அமெரிக்காவிடம் ஏலியன் வாகனங்கள் எனப்படும் யுஎப்ஓ-க்கள் அரசு வசம் உள்ளது. பல உடைந்த வாகனங்களும், சில நல்ல வாகனங்களும் உள்ளன. இதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பல இடங்களில் இவர்கள் யுஎப்ஓக்களை தாக்கி அழித்துள்ளனர். அதேபோல் பல முறை ஏற்கனவே மாட்டிய யுஎப்ஓவை பார்த்து ரிவர்ஸ் எஞ்சினியரிங் மூலம் அதை திருப்பி செய்ய முயன்று உள்ளனர்.

“மனிதர்கள் அல்லாத உயிரிகள் அரசாங்கத்தால் மீட்கப்பட்டுள்ளன. அப்படி மீட்கப்பட்டுள்ள உயிரிகளைத் தான் பார்த்ததில்லை” என்று விசாரணையில் க்ரூஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், யுஎப்ஓ தொடர்பான விஷயத்தை வெளியே சொல்ல முயன்ற பலர் துன்புறுத்தப்பட்டு உள்ளனர். கொடுமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மோசமாக நடத்தப்பட்டு உள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பறக்கும் தட்டுகள் தொடர்பாக பென்டகன் தொடர்ந்து பல விஷயங்களை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.