கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ - அவரது மனைவி சோபி கிரிகோரி 
உலகம்

“எங்களின் திருமணம் அவ்வளவு சரியாக இல்லை…!” - பிரிவை அறிவித்தார் கனடா பிரதமர்!

Staff Writer

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், சோபி கிரிகோரியும் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன பத்து ஆண்டுகள் கழித்து ட்ரூட்டோ பிரதமரானதால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அவர்களுக்கு சேவியர் (15), எல்லா கிரேஸ் (14), ஹாட்ரியன் (9) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோபி கிரிகோரியைப் பிரிவதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பல அர்த்தமுள்ள மற்றும் கடினமான உரையாடல்களுக்குப் பிறகு, நாங்கள் பிரியும் முடிவை எடுத்துள்ளோம் என்ற உண்மையை நானும் சோஃபியும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.

எப்போதும் போல, நாங்கள் ஒருவரையொருவர் ஆழ்ந்த அன்பும் மரியாதையும் கொண்ட ஒரு நெருங்கிய குடும்பமாக இருக்கிறோம். எங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக, எங்கள் தனியுரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

தற்போது 51 வயதாகும் ட்ரூடோவும் 48 வயதாகும் சோபி கிரிகோரியும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தன்னுடைய திருமண வாழ்வு குறித்து, ட்ரூடோ தனது சுயசரிதை புத்தகத்தில், “எங்கள் திருமணம் சரியானதாக இல்லை. இருவருக்கும் கடினமான ஏற்ற தாழ்வுகள் இருந்தபோதிலும், சோபி எனது தோழியாக, துணையாக, என் அன்பாகவே இருக்கிறார். மிக மோசமான சூழ்நிலையில் கூட நாங்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்கிறோம்” என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.