நாகை செல்லூர் பகுதியில் மழையில் மூழ்கிய சம்பா நெற்பயிர்களைப் பார்வையிட்ட முன்னாள் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி! 
தமிழ் நாடு

வேளாங்கண்ணியில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை- நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!

Staff Writer

தமிழகத்தில் பரவலாக இரண்டு நாள்களாக நல்ல மழை பெய்துவரும் நிலையில், இன்று மதியம் 1.15 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பெரு மழை பெய்துள்ளது. வானிலை மைய மழைமானியின்படி 17 செ.மீ. மழை பெய்துள்ளது. 

நாகப்பட்டினத்தில் 15 செ.மீ., புதுச்சேரியின் காரைக்காலில் 14 செ.மீ., திருவாரூர் மாவட்டம் நன்னிலம், கடலூர் மாவட்டம் கடலூர், பரங்கிப்பேட்டை, புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 12 செ.மீ., நாகை மாவட்டம் வேதாரண்யம், திருப்பூண்டி ஆகிய இடங்களில் 11 செ.மீ., மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை,கோடியக்கரை, கடலூர் மாவட்டம் சிதம்பரம், நாகை மாவட்டம் தலைஞாயிறு, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய இடங்களில் 10 செ.மீ. எனும் அளவில் மழை பதிவாகியுள்ளது. 

பழைய கீழைத் தஞ்சைப் பகுதிகளில் இரு நாள்களாகப் பெய்த மழையின் காரணமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நாகை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ம.ஜ.க. தலைவரும் நாகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி பார்வையிட்டார். பாதிப்பைச் சரிசெய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.