திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார்.  
தமிழ் நாடு

விட்டுத்தராமல் பேசிய பிரதமர், முதல்வர்- திருச்சி விழா சுவாரஸ்யம்!

Staff Writer

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரதமர் மோடியும் முதலமைச்சர் ஸ்டாலினும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய இருவரும் தங்களின் உரையில் அவரவர் அரசின் நிலைப்பாடுகளையும் கொள்கைகளையும் விட்டுத்தராதபடி பேசினர்.

அரசு விழாவாக இருந்தபோதும் அரசியல் விழாவைப் போலவும் அமைந்துவிட்டது, பட்டமளிப்பு விழா. பிரதமர் பேசியபோது, கூட்டத்தில் திரண்டிருந்த பா.ஜ.க.வினர் பாரத் மாத்தாக்கீ ஜெய் என்றும் மோடி வாழ்க என்றும் கோஷமிட்டனர். 

பிரதமர் மோடி தன் உரையில், தமிழகத்துக்கு பா.ஜ.க. மைய அரசு மூன்று மடங்கு நிதியுதவி அளித்துள்ளதாகக் குறிப்பிட்டது முக்கியமானது. 

மேலும், ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வந்துசெல்லும்போது சக்தியை நிரப்பிச்செல்வதாக அவர் பேசியது தொண்டர்களை புளகாங்கிதம் அடையச்செய்தது. 

நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியபோது, சென்னையிலும் தென்கோடி மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்புக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்கவேண்டும் என வலியுறுத்தினார்.