தமிழ் நாடு

முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

Staff Writer

தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் பாத்திமா பீவி, கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 96. 

முதுமை, நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று இயற்கை எய்தினார். 

அவரின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி விடுத்துள்ளார். 

அதில், “ தமிழ்நாடு முன்னாள் ஆளுநரும், உச்சநீதிமன்ற நீதிபதியான முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவருமான பாத்திமா பீவி அவர்கள் மறைந்தார் என்றறிந்து வருந்துகிறேன்.

உச்சநீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர், கேரள பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர், தமிழ்நாடு ஆளுநர் எனப் பல உயர்பொறுப்புகளில் பணியாற்றியுள்ள பாத்திமா பீவி அவர்களது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.