ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்ததற்கு எதிராக உத்தவ் தாக்ரே தரப்பில் தொடரப்பட்ட வழக்கின் உச்ச நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உத்தவ் தரப்பு நீதிமன்றத்தை நாடியது.
இதுதொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மகாவிகாஸ் கூட்டணி அரசை அன்றைய ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தது சட்டத்திற்கு புறம்பானது. அதேவேளை, உத்தவ் தாக்கரே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது தவறு. அவர் ராஜினமா செய்யாமல் இருந்திருந்தால், அன்றைய நிலையே தொடரும் என நீதிமன்றம் கூறியிருக்கும்.
உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ளாமல் ராஜினாமா செய்ததால் பழைய நிலையை தொடரும் என உத்தரவிட நீதிமன்றத்தால் முடியாது. அதேபோல், உறுப்பினர்கள் தகுதி நீக்கம் என்பதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதை சபாநாயகர் தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்க சபாநாயகருக்கு நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்குவதாக தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் ஏக்நாத் ஷிண்டே தலமையிலான மகாராஷ்டிரா கூட்டணி அரசானது எந்த பாதிப்பு இல்லாமல் தப்பியது. இந்த நீதிமன்ற தீர்ப்பை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்றுள்ளனர்.