தமிழ் நாடு

என்.ஐ.ஏ. சோதனை அரசியல் பழிவாங்கல்- சீமான் கண்டனம்!

Staff Writer

நாம்தமிழர் கட்சி நிர்வாகிகளின் இடங்களில்தேசியப் புலனாய்வு முகமை- என்.ஐ.ஏ. அண்மையில் நடத்திய சோதனை நடவடிக்கைகள் குறித்து இன்று அக்கட்சியின் தலைவர் சீமான் கருத்துத் தெரிவித்துள்ளார். இது அரசியல் பழிவாங்கலே என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதைக் கூறியுள்ள அவர், தங்களுக்காகக் குரல்கொடுத்த ஜனநாயக இயக்கங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். 

அவரின் அறிக்கை:

“ இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தமது அரசியல் ஆக்கிரமிப்புக்கும், அதிகாரப் பரவலுக்கும் இடையூறாக உள்ள சனநாயக அமைப்புகள் மீது எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு தாக்குதல் நடத்துவது அண்மைக் காலமாகத் தொடர் கதையாகிவிட்டது. அந்த வகையில், மக்களாட்சிப் பாதையில் அறிவாயுதம் ஏந்தி தமிழ் மொழி காக்கவும், தமிழ் மண்ணின் வளங்களைக் காக்கவும், வருங்கால தமிழிளம் தலைமுறை நலத்திற்காகவும் தொடர்ச்சியாக களத்தில் நின்று போராடும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அச்சுறுத்தும் நோக்கத்தில் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு தனது கைப்பாவையான தேசிய புலனாய்வு முகமை (NIA) மூலம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை என்ற பெயரில் நடத்தியுள்ள அரசியல் பழிவாங்கும் போக்கினைக் கண்டித்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழகத் தலைவர் சகோதரர் நெல்லை முபாரக், மனிதநேய சனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ்த்தேச தன்னுரிமை கட்சித் தலைவர் அ.வியனரசு ஆகியோருக்கு எனது அன்பும் நன்றியும்.” என்று சீமானின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.