தமிழ் நாடு

ஆவின் பாலில் கொழுப்புக் குறைப்பு மோசடி: நிரூபணம் என பா.ஜ.க. சாட்டு!

Staff Writer


தமிழ்நாட்டில்  4.5% கொழுப்புச் சத்து கொண்ட  பச்சை உறை பால் விற்பனையை வரும் 25ஆம் தேதியுடன் நிறுத்தவும் அதற்கு மாறாக  3.5% கொழுப்புச் சத்து கொண்ட ஆவின் டிலைட் என்ற பாலை அறிமுகம் செய்யவும் ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியுள்ளார். 

” தமிழ்நாட்டு மக்களுக்கு பல நுண்ணூட்டச் சத்துகள் கொண்ட பாலை வழங்க வேண்டும் என்பதற்காகத் தான்  ஆவின் டிலைட் பால் அறிமுகம் செய்யப்படுவதாக  ஆவின் நிறுவனம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையாகவே,  தமிழ்நாட்டு மக்களுக்கு நுண்ணூட்டச் சத்து நிறைந்த பாலை தர வேண்டும் என்ற எண்ணமும், ஆவின் டிலைட் பாலில்  நுண்ணூட்டச் சத்துகளும் இருந்தாலும், அந்த வகை பாலை ஏற்கனவே இருக்கும்  ஆவின்  நீலம்,  பச்சை, ஆரஞ்சு வண்ண உறைகளில் விற்கப்படும் பால்களுடன் கூடுதலாக அறிமுகம் செய்திருக்க வேண்டும்.  ஆவின் பச்சை உறை பாலை நிறுத்தி விட்டு டிலைட் பாலை அறிமுகம் செய்திருக்கக் கூடாது.

ஆவின் ஆலைகளில் பதப்படுத்தப்படும் பாலில் கொழுப்புச்சத்துக் குறைவாக இருப்பதால், அதன் கொழுப்புச் சத்தை  4.5% என்ற அளவுக்கு உயர்த்த ஆண்டுக்கு ரூ.840 கோடி அளவுக்கு வெண்ணெய்யை வாங்கி பாலுடன்  சேர்க்க வேண்டியுள்ளது. அதனால் ஏற்படும் கூடுதல் செலவை தவிர்ப்பதற்காகத் தான் பச்சை உறை பால் உற்பத்தி மற்றும் விற்பனையை ஆவின் நிறுவனம் நிறுத்தியிருக்கிறது. 3.5% என்ற குறைந்த கொழுப்புச் சத்துக் கொண்ட ஆவின் டிலைட் பாலுக்கு, 4.5% கொழுப்பு சத்து கொண்ட பச்சை உறை பாலின் விலையையே வசூலிப்பது மறைமுகமான விலை உயர்வு ஆகும். இதனால், ஆவின் பால் வாடிக்கையாளர்கள் தனியார் பாலை நோக்கி செல்லும் வாய்ப்புள்ளது. அதற்காகத் தான் ஆவின் இப்படி செய்கிறதா? என்ற ஐயம் எழுகிறது.

ஆவின் நிறுவனம் கடுமையாக நிர்வாகச் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் விற்பனை 10 லட்சம் லிட்டருக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், அதன் கொள்முதல் வழக்கமான அளவைவிட சுமார் 10 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் காலப்போக்கில் ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்த நேரிடும். இந்த நிலையை மாற்ற  பால் கொள்முதலையும்,  கொள்முதல் விலையையும் உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டின் பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை குறைந்தது 50% ஆக உயர்த்த  தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அன்புமணி ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் ஆகும். ஏற்கனவே 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச் சத்தே இருப்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில் , தமிழக பா.ஜ.க. மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்தச் சோதனை அறிக்கையை அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம். இவ்வாறு கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடி கொண்டிருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. மேலும், பாலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து விட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும்.” என்று அண்ணாமலை தன் அறிக்கையில் கூறியுள்ளார்.