தமிழக அரசாங்கத்துக்கும் ஆளுநர் ஆர்.என். இரவிக்கும் இடையிலான உரசல் போக்கில், உச்சநீதிமன்றம் சில அறிவுரைகளைக் கூறியுள்ளது. அதில், பிரச்னையை சுமுகமாக முடிக்க வேண்டுமானால் ஆளுநரே முதலமைச்சரை அழைத்துப் பேசவேண்டும் என்பது முக்கியமானது. அதன்படி, ஆளுநர் தரப்பிலிருந்து முதலமைச்சரைச் சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று உச்சநீதிமன்றத்தில் இத்தகவலை அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் இப்போது புயல் நிவாரணப் பணிகளில் மும்முரமாக இருப்பதால், அது முடிந்தபின்னர் அவர் ஆளுநரைச் சந்திப்பார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இரண்டாம் முறை அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பியதில் முடிவெடுக்காமல் நிறுத்திவைக்கும்படி அரசுத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு,தலைமை நீதிபதி சந்திரசூட், குடியரசுத்தலைவரிடம் நாங்கள் எதுவும் அறிவுறுத்தமுடியாது என்றும் முதலமைச்சரும் ஆளுநரும் பேசிக்கொண்டால் விசயங்கள் சுமுகமாக இருக்கும்; அதில் என்ன தடை... ஆளுநர் தரப்பு இதில் அக்கறை காட்டவேண்டும் என்றும் கூறினார்.