பி.எஸ்.ராமன், மூத்த வழக்கறிஞர் 
தமிழ் நாடு

அரசுத் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் விலகல்- பி.எஸ்.ராமன் நியமனம்!

Staff Writer

தமிழ்நாடு அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து ஆர். சண்முகசுந்தரம் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பி.எஸ்.இராமனை நியமிக்க ஆளுநருக்கு அரசு பரிந்துரை செய்துள்ளது. 

கடந்த 2021ஆம்ஆண்டில் தி.மு.க. ஆட்சி பதவிக்கு வந்ததிலிருந்தே சண்முகசுந்தரம் இந்தப் பதவிக்கு வந்தார். ஆனால் கடந்த ஆண்டில் இப்பதவியில் தொடர்வதில் தனக்கு விருப்பமில்லை என முதலமைச்சருக்கு அவர் தெரிவித்ததாகவும், ஆனால் இவரையே தொடர்ந்து பணியில் நீட்டிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

அண்மையில் நியமிக்கப்பட்ட கூடுதல் வழக்கறிஞர் ஒருவர் விவகாரம் உட்பட சில பிரச்னைகள் உண்டானதாகவும் வழக்குத்தொடர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இந்த நிலையில், தனிப்பட்ட காரணங்களால், பதவியிலிருந்து தான் விலகிக்கொள்வதாக சண்முகசுந்தரம் அரசுக்கு முறைப்படி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. அதை உறுதிப்படுத்திய வட்டாரங்கள், அவருக்குப் பதிலாக வழக்கறிஞர் பி.எஸ்.ராமனை நியமிக்க அரசு முடிவுசெய்ததையும் தெரிவித்தன. 

ஆளுநர் மாளிகைக்கு இது தொடர்பான கோப்பும் அனுப்பப்பட்டுவிட்டது; அவர் அனுமதி அளித்தபின் நியமனம் உறுதியாகும்.