தமிழ் நாடு

அப்பன் வீட்டுச் சொத்து என்பதா?- தமிழிசைக்கு உதயநிதி பதில்!

Staff Writer

புயல் வெள்ள நிவாரணம் குறித்து அமைச்சர் உதயநிதி அப்பன் வீட்டுச் சொத்து எனக் குறிப்பிட்டது மரியாதைக்குறைவானது என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூறியிருந்தார். இன்று வடசென்னை எண்ணூர் எண்ணெய்ப் படலம் பரவிய பகுதியைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் உதயநிதியிடம் இதைப் பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். உடனே உதயநிதி, “ யாரையும் மரியாதைக் குறை வாகப் பேசவில்லை. வேண்டுமென்றால் இப்படி சொல்லட்டுமா... மாண்புமிகு ஆளுநரின் அப்பா வீட்டு சொத்தையா கேட்கின்றோம்? மாண்புமிகு ஒன்றிய அரசில் இருக்கக்கூடிய அமைச்சர் அமித்ஷாவின் அப்பா வீட்டு சொத்தையா நாங்கள் நிவாரண நிதியாக கேட்கின்றோம், மக்களு டைய வரிப் பணத்தைத்தான் கேட்கின்றோம்?” என்று எள்ளலுடன் பதில் அளித்தார். 

முன்னதாக, எண்ணூர் பகுதியில் கடலிலும் கொற்றலையாறு கடலில் கலக்கும் கழிமுகத்திலும் பெட்ரோலிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணியை அவர் பார்வையிட்டார். முதலமைச்சரின் உத்தரவின்படியே தான் வந்துள்ளதாகவும் அவர் கூறினார். 

பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டதுடன், நிவாரணப் பொருட்களையும் அமைச்சர் உதயநிதி வழங்கினார்.