தமிழ் நாடு

நெல்லையில் துயரம்: ஆட்டோ கவிழ்ந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

Staff Writer

நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் ஆட்டோ கழிந்த விபத்தில் 10 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் அடையாக்கருங்குளத்தை சேர்ந்த சுமார் 11 குழந்தைகள் இன்று காலை வழக்கம் போல் ஆட்டோவில் பள்ளிக்கு புறப்பட்டனர்.

ஆட்டோவை அடையக்கருங்குளத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் ஓட்டி வந்தார். டிரைவரின் அருகே வி.கே.புரத்தை சேர்ந்த சித்திரை நாதன் என்பவரது மகன் பிரதீஸ் என்ற 5ஆம் வகுப்பு மாணவன் அமர்ந்திருந்தார்.

அகஸ்தியர்பட்டியில் தனியார் ஓட்டல் அருகே ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது சாலையின் குறுக்காக திடீரென நாய் ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவர் சுந்தர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பிரதீஸூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். ஆட்டோவில் பயணித்த மற்ற குழந்தைகளுக்கும் காயங்கள் ஏற்பட்டன. ஆட்டோ டிரைவரும் காயம் அடைந்தார்.

தகவல் அறிந்து வி.கே. புரம் காவல் ஆய்வாளர் சுஜித் ஆனந்த் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த குழந்தைகள் அம்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.