பரிதாபங்கள் யூட்டியூப் சேனல் கோபி - சுதாகர் 
தமிழ் நாடு

லட்டு வீடியோ: பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான புகாரை திரும்பபெறுகிறது பாஜக!

Staff Writer

பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான வழக்கி திரும்பபெறுவதாக தமிழக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரபல யூடியூபர்கள் கோபி, சுதாகர் இணைந்து நடத்தி வரும் பரிதாபங்கள் சேனலில், லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் ஒரு வீடியோ வெளியானது. ஆனால் சில மணிநேரங்களிலேயே அந்த வீடியோ நீக்கப்பட்டது.

லட்டு பரிதாபங்கள் வீடியோ நீக்கப்பட்டது தொடர்பாக பரிதாபங்கள் யூடியூப் சேனலின் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த பதிவில், "கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளியான விடியோ முழுக்க நகைச்சுவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால்... அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம். இதுபோல் வரும் காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இருந்து இந்த வீடியோ நீக்கப்பட்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்துக்களின் உணர்வுகளை அவமதித்ததாக கூறி 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் தமிழக பாஜக சார்பில் அமர் பிரசாத் ரெட்டி புகார் அளித்தார்.

இந்நிலையில், லட்டு வீடியோவுக்காக தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவிடம் கோபி, சுதாகர் தொலைபேசி வாயிலாக மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீதான புகாரை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாராயணன் திருப்பதி புகார் என்ன ஆனது?

பரிதாபங்கள் சேனல் மீது தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தமிழக டிஜிபியிடம் கடந்த 26ஆம் தேதி புகார் அளித்திருந்தார். இந்த புகார் திரும்ப பெறப்படுகிறதா? இல்லையா? என்று தெரியவில்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram